மூத்த ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ நூல் சர்வதேச மாற்று திறனாளிகள் நாளான, நேற்று முன்தினம் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
மாற்று திறனாளிகளின் சமூக, வாழ்வியல் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு நிகழ்வானது, மாந்தை மேற்கு வீகான் (We Can) நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் எழுத்தாளர் வெற்றிச் செல்வியின் (சந்திரகலா) தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு கலந்து கொண்டிருந்தார். நூல் வெளியீட்டு நிகழ்வினை கவிஞர் மன்னார் பெனில் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் கலாநிதி நா.செந்தூர் செல்வனின் வரவேற்பு நடனம் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து பிரதம விருந்தினர் மற்றும் திருமதி.நாகேஸ்வரி மாணிக்கவாசகம் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து நூலை வெளியிட்டு வைக்க, ‘எங்கட புத்தகங்கள்’ அமைப்பின் நிறுவனர் குலசிங்கம் வசிகரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
நூலாசிரியரும், ஊடகவியலாளருமான பி.மாணிக்கவாசகத்தின் சேவையினைப் பாராட்டி மாந்தை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ‘காலத்தின் குரல்’ என்ற விருதினை வழங்கி கௌரவித்தனர்.