அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள்

அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள்

இஸ்ரேலும் பெஹாசஸ் ஸ்பைவெயரும்

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ (NSO) நிறுவனம் தயாரித்த பெஹாசஸ் ஸ்பைவெயர் (Pegasus spyware) எனப்படும் மென்பொருள், உலக நாடுகளில் உள்ள மக்களின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கி  உள்ளதுடன். தற்போது அமெரிக்காவையும் பதற்றமடைய வைத்துள்ளது.

என்.எஸ்.ஓ நிறுவனத்தைத் தடைசெய்ய வேண்டும் என அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த வாரம் கோரிக்கை விடுத்துள்ளனர். 17 இற்கு மேற்பட்ட ஊடக நிறுவனங்களும் மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் அதனைத் தான் கூறியுள்ளன.

அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள்

இஸ்ரேலின் ஒய்வுபெற்ற சைபர் பிரிவு புலனாய்வு படை அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த நிறுவனம், தயாரித்துள்ள பெஹாசஸ் (புராணங்களில் வரும் பறக்கும் வெள்ளைக் குதிரை என்பது அதன் பொருள்) எனப்படும் மென் பொருளானது, எல்லா வகையான கைத் தொலைபேசிகள் மற்றும் கணினிகளை ஊடுருவி, அதன் கட்டுப்பாட்டைத் தன்னவசமாக்கி, அதில் உள்ள தகவல்களை திருடுவதுடன், அதன் ஒளிப்படக் கருவி, ஒலிவாங்கி ஆகியவற்றை தன்னிச்சையாக பயன்படுத்துவதுடன் மற்றும் நபர்களின் நடமாட்டங்கள் குறித்த தகவல்களையும் எதிர்த்தரப்புக்கு வழங்கக் கூடியது.

கொரோனோ வைரஸ் எவ்வாறு எமது உடலின் கலங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்து செயல்பட வைக்கின்றதோ, அதேபோலவே இந்த மென்பொருள் தொலைபேசியின் மூளையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிடும்.

அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆய்வு
அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள்

அனைத்துலக மன்னிப்புச் சபை பரிசோதனை செய்த 67 தொலை பேசிகளில் 37 தொலைபேசிகள் இதன் தாக்கத்திற்கு உட்பட் டிருந்தன. அதிலும் 34 தொலை பேசிகள் அப்பிள் நிறுவனத்தின் தொலைபேசிகள் என்பது குறிப்பிடத் தக்கது. அதில் iPhone 11 மற்றும்  iPhone 12  ஆகிய கைத் தொலைபேசிகளும் அடங்கும்.

இது ஒரு இராணுவ ஆயுதமாக தரப்படுத்தப் பட்டுள்ளதுடன், அதனை இஸ்ரேலின் அனுமதியுடன் படைத்துறைப் பாவனைக்கே விற்பனை செய்ய முடியும். அதனைக் கொள்வனவு செய்யும் நாடுகளும் அதனைத் தமது படை நடவடிக்கைகளுக்கு, குற்றவாளிகளை கண்டறிவதற்கு அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

பெஹாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்ட  உலகத் தலைவர்கள்

எனினும் அதனைக் கொள்வனவு செய்த நாடுகள், தம்மை எதிர்ப்பவர்கள், எதிர்க்கட்சித் உறுப்பினர்கள், தமது கட்சிக்குள் உள்ள அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள் என பெருமளவானோரைக் கண்காணிப்பதற்கு அதனைப் பயன்படுத்தியதுடன், பலரைப் படுகொலையும் செய்துள்ளன.

அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள்

இஸ்ரேலுடன் உறவுகளைப் பேணாத சவுதி அரேபியா 2017 ஆம் ஆண்டு சைபிரஸ் இல் என்.எஸ்.ஓ அதிகாரிகளைச் சந்தித்ததுடன், 55 மில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தகத்திலும் ஈடுபட்டிருந்தது. இஸ்ரேலின் அனுமதியுடன் அதனைக் கொள்வனவு செய்த சவுதி, அதனைக் கொண்டு வோசிங்டன் போஸ்ட் பத்தி எழுத்தாளர் Jamal Khashoggi யும் துருக்கியில் வைத்து படுகொலை செய்திருந்தது. அது மட்டுமல்லாது, அவரின் படுகொலையின் பின் அவரின் மனைவி மற்றும் வழங்கறிஞர்களின் கைத் தொலை பேசிகளிலும் ஊடுருவி காண்காணிப்புக்களை மேற் கொண்டது தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ‘த கார்டியன்’, அமெரிக்காவின் ‘வோசிங்டன் போஸ்ட்’ மற்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை என்பன இந்த விடயத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன.

அனைத்துலக மன்னிப்புச்சபையின் தகவல்களின் படி 50 நாடுகள் இதனைப் பயன்படுத்தி வருவதாகவும், 50,000 இற்கு மேற்பட்டவர்களின் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

அதில் 189 ஊடகவியலாளர்கள், 600 இற்கு மேற்பட்ட அரசியல்வாதிகள், 85 மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், 65 தொழிலதிபர்கள் உட்பட பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், தென்னாபிரிக்க பிரதமர், பிரான்ஸ் நாட்டின் அரச தரைலவர், மெக்சிகன் அரச தலைவரின் நெருக்கமான வட்டாரங்கள், CNN, Associated Press, New York Times and Wall Street Journal ஆகிய ஊடகங்களின் ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளும் கண்காணிக்கப்பட்டுள்ளன.

என்.எஸ்.ஓ நிறுவனத்தின் புதிய வாடிக்ககையாளர்களாக இந்தியாவும், ஹங்கோரியும் அண்மையில் இணைந்திருந்தன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் இந்தியா இதனைக் கொள்வனவு செய்துள்ளது. வரலாற்றில் இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் தடவை.

ஆனால் இந்தியா இந்த மென்பொருளைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரின் ஆலோசகர், மோடி அரசில் உள்ள இரு அமைச்சர்கள், 40 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர் உட்பட 1000 இற்கு மேற்பட்டவர்களை கண்காணித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது இது மேற்கொள்ளப்பட்டதால் தேர்தல் ஒரு மோசடியான தேர்தல் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. தமிழகத்திலும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவானவர்கள் பலர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேற் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ‘த பைனான்ஸியல் ரைம்ஸ்’ இன் உதவி ஆசிரியர் Roula Khalaf  இன் நடவடிக்கைகளை கண்காணித்திருந்தது.

அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள்

இந்த மென்பொருளானது நபர்களின் நடமாட்டம் மற்றும் வதிவிடம் குறித்த தகவல்களையும் வழங்குவதால், அவர்களைக் கண்காணித்துத் தாக்குதல் நடத்த மற்றும் படுகொலை செய்ய உதவுகின்றது. மெக்சிகோ நாட்டின் ஊடகவிலாளர் Cecilio Pineda தனது காரை கழுவும் போது அந்த இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் நடமாட்டம் இந்த மென்பொருள் மூலம் அறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெஹாசஸ் ஸ்பைவெயர் மென்பொருளால் ஏற்படவுள்ள ஆபத்துகள்

இந்த மென்பொருளை அனுமதித்தால், மக்களின் சுதந்திரம் பறிபோய்விடும் என்ற கருத்தை முன்வைத்துள்ளது அனைத்துலக மன்னிப்புச் சபை. நாடுகள் தமக்கு எதிரானவர்களையும், மக்களையும் மிரட்டி தனது அதிகாரத்திற்கு பணியவைக்க இதனைப் பயன்படுத்தலாம் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன.

அதாவது நான் சொல்வதைக் கேழுங்கள். இல்லையேல் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நாம் ஊடுருவுவோம் என்ற செய்தியே இந்கு கூறப்படுகின்றது. இதனைப் பெருமளவில் பயன்படுத்துவது என்பது ஒரு பொறுப்பற்ற செயல் என கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் John Scott-Railton தெரிவித்துள்ளார்.

அதனை அரசுகள் செய்தாலும் இது ஒரு குற்றம் என Raman Jit Singh Chima, Asia Pacific Policy Director and Global Cybersecurity Lead அல்ஜசீரா ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார். கண்காணிப்பது உறுதிப்படுத்தப்பட்டால், இந்தச் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தொழில் நுட்பமானது இந்தியா, இலங்கை போன்ற ஜனநாயகமற்ற நாடுகளில் உள்ள மக்களுக்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சங்கள் எழுந்துள்ளன.

இலங்கை அரசு இதனைக் கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கடந்த மார்ச் மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

அதன் பின்னர் இலங்கையில் பெருமளவான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதுடன், செயற்பாட்டாளர்களின் நடமாட்டங்கள் மற்றும் திட்டங்கள் என்பன கண்டறியப்பட்டு, அவர்கள் கடத்தப்பட்டும் உள்ளனர்.

இஸ்ரேலினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளானது தடைசெய்யப்படாது விட்டால், உலகில் உள்ள மக்களின் சுதந்திரத்தை காலப்போக்கில் அது பறிக்கும் என்பதுடன், அரசியல் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படும் சாத்தியங்களே அதிகம் தென்படுகின்றது. மேலும், உலக நாடுகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். எனவே தான் தற்போது அமெரிக்கா விழித்துக் கொண்டுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021