பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் மன்னார் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.
கடந்த 2021.02.03ஆம் திகதி தொடக்கம் 2021-02-07ஆம் திகதி வரை இடம்பெற்ற ‘பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை’ மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் மத குருமார்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டம் நடைபெற்று முடிந்த நாட்கள் முதல் அதில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் காவல்துறையினரின் விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் இது குறித்து வாக்குமூலங்கள் பெற்றிருந்த போதிலும் இன்றும் அவரிடம் வாக்கு மூலத்தை கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து மன்னார் காவல்துறையினர் பதிவுசெய்துள்ளனர்.