Home செய்திகள் திறப்பு விழா காணும் ‘ஆற்றல்’ நுண்கலைக் கல்லுாரி- “எம் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசியை விட, கல்வி பசியே...

திறப்பு விழா காணும் ‘ஆற்றல்’ நுண்கலைக் கல்லுாரி- “எம் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசியை விட, கல்வி பசியே அதிகம்“-வெற்றிச் செல்வி

WhatsApp Image 2022 09 16 at 10.36.21 PM திறப்பு விழா காணும் 'ஆற்றல்' நுண்கலைக் கல்லுாரி- “எம் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசியை விட, கல்வி பசியே அதிகம்“-வெற்றிச் செல்வி

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கலைத்துறையை வளர்த்தெடுக்கவும் தொழிற்கல்வி பெறுவோருக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஊக்குவிக்கவும் “ஆற்றல்” நுண்கலைக்கல்லுாரி ஒன்று எழுத்தாளர் வெற்றிச் செல்வி சந்திரகலா அவர்களின் பெரும் முயற்சியின் காரணமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நுண்கலைக்கல்லுாரி இன்றைய தினம் மக்களின் பெரும் ஆதரவோடு  திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ஆற்றல் நுன்கலைக்கல்லுாரி குறித்து அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் எழுத்தாளர் வெற்றிச் செல்வி சந்திரகலா அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி….

கேள்வி- நீங்கள் உருவாக்கியுள்ள நுண்கலைக்கல்லூரி குறித்து சிறு அறிமுகம் செய்ய முடியுமா?

நிச்சயமாக. இதுவொரு நுண்கலைக்கல்லூரி.‘ஆற்றல்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற கலையாற்றலைக்  கண்டுபிடித்து வளர்த்தலை தனது பணியாகக்கொண்டு இக்கல்லூரி செயலாற்றும்.

இது தனியார் நுண்கலைக் கல்லூரியாக வியாபாரப்பதிவு (Business registration)  செய்யப்பட்டுள்ளது. இதனை ஆர்வமுள்ள அனைவரும் தமது ஆற்றல் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அது  மட்டுமல்ல சமூகப்பணிகளைச் செய்ய விரும்புவோரும் தமது பணிகளைச்செய்வதற்கு இக்கல்லூரியுடன் இணைந்து கொள்ளலாம்.  இது ஈழத்தின் (வடக்கில்) மன்னார் மாவட்டத்தில் அடம்பன் பகுதியில்  அமைக்கப்பட்டுள்ளது. சிறியசிறிய செயற்பாடுகளோடு கனவில் இருந்த கல்லூரிக்கான வேலைகளைத் தீவிரமாக ஆரம்பித்து  இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

கேள்வி-2 நுண்கலைக் கல்லூரியில் என்னென்ன கலைகளை பயில்விக்க திட்டமிட்டுள்ளீர்கள்?

தமிழர் பாரம்பரியக் கலைகளை பயிற்றுவிப்பதும் கொண்டாடுவதுமே முதன்மையாக இருக்கவேண்டும் என்பது விருப்பம். மேளம், உடுக்கை,பறை போன்றவற்றோடு பாரம்பரிய மற்றும் நவீன வாத்தியக்கருவிகள் இசைப்பதற்கான பயிற்சிகளை வழங்கும் எண்ணமுள்ளது.

இயல் இசை நாடக பயிற்சிப்பட்டறைகளை நடத்துவோம்.    புகைப்படம்,   சினிமா,  காணொலி வடிவமைப்பு, ஆவணப்படம் என்பவற்றை பார்க்கவும் தயாரிக்கவும் பயிற்சிகளை வழங்குவோம். வாழ்க்கைக்குத் தேவையான ஆளுமைகளை வளர்க்கும் வண்ணம் பயிற்சிப்பட்டறைகளையும் நடத்துவோம்.

தேவைக்கேற்ப தொழில்கலைகளையும் பயிற்றுவிப்போம். இதுதான் என்ற வரையறை இன்றி வாழ்தலுக்குத் தேவையான வகைளில் வாழும் சூழலுக்குத் தேவை என்றுணர்கின்ற பலவற்றையும் பயில இடமளிப்போம். இதை ‘எங்களுடைய கல்லூரி’ ஆக யாவருமாக இணைந்து நடத்திச்செல்லவே சிந்திக்கிறோம்.

கேள்வி-3 இக் கல்லூரியை உருவாக்குவதற்கு நீங்கள் எதிர் கொண்டுவரும் நெருக்கடிகள், தமிழ் உறவுகளிடம் என்ன மாதிரியிலான உதவிகளை எதிர்பாக்கின்றீர்கள்?

ஆரம்பம் முதலே நெருக்கடி என்பது,பொருளாதாரம்தான்.  இக்கல்லுாரியை ஆரம்பிக்க நினைத்த போது என்னிடம் நிலம் இருக்கவில்லை. அதனால் அதற்கான காணி ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கு ஒரு வங்கியில் கடன் எடுத்து மாதாந்தம் பெரும் நெருக்கடியின் மத்தியில் கடன்  கட்டிக்கொண்ட வருகின்றேன். ஆரம்பிப்பது என்பதுதான் மிகப்பெரிய சவால். ஆரம்பித்தாயிற்று. சிறியசிறிய விடயங்களில் பலரும் முன்வந்து ஆதரவளித்தால் இன்னும் விரைவாக வளர்த்துச்செல்ல முடியும்.

தற்போது சில வாத்தியக்கருவிகள் சில தளபாடங்கள்  சிறிதளவு புத்தகங்கள் சிறிய மேடையுடனான பயிற்சி இடம் என்பவையே உள்ளன. கல்லுாரி திறப்பதற்கு முன்பாகவே அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வரையில் சைகைமொழிப் பயிற்சியை நிறைவுசெய்துள்ளோம். Digital marketing பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வீதிநாடகங்களைத் தயாரித்து பல இடங்களில் நடத்துவதற்கான  கோரிக்கைகள் வருகின்றன. இதற்குள் வாத்தியம் நடனம் இசை என்று பழக்குவதற்கு இடம் போதாமல் உள்ளது. ஆகவே முதலாவதாக எதிர்பார்ப்பது இக்கல்லூரியின் இடத்தை கொஞ்சம் அதிகரித்துக்கொள்வதே. கல்லூரிக் காணியுடன் அருகில் இருக்கின்ற நிலத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். காணி வாங்குவதற்கு பலரும் இணைந்து உதவவேண்டும் என்பது எனது விருப்பம்.  வாத்தியக் கருவிகள், தளபாடங்கள்,   ஒலி ஒளி அமைப்புக்கான பொருட்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன.

கேள்வி -4 மாணவர்களின் ஆர்வம் எப்படி உள்ளது?

எதிர்பாராத அளவுக்கு ஆர்வம் காட்டுகிறார்கள். சைகைமொழிப் பயிற்சி நடந்து முடியவுள்ளது. ஆனால் அடுத்தது எப்போது ஆரம்பிக்கிறீர்கள்? ஒன்லைலனில் கற்க வசதி ஏற்படுத்தித் தருவீர்களா என்று கேட்கிறார்கள். அதாவது அருகில் வசிப்பவர்கள் மட்டுமல்ல வெளிமாவட்டங்களில் இருப்பவர்கள்கூட இக்கல்லூரியில் கற்க விரும்புகின்றனர்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் இக்கல்லுாரியில் பயின்ற மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட முதலாவது நிகழ்வு கோலாட்டம். இதில் பன்னிரெண்டு சிறுமிகள் கலந்து கொண்டார்கள்.

பத்துப்பேருக்கு Digital marketing பயிற்சி வழங்க விரும்பினோம். 15 பயிலுனர்கள் வருகின்றனர். மேலும் வருவதற்கு ஆர்வமானவர்களை அடுத்த பயிற்சியில் இணைத்துக்கொள்வதாகச் சொல்லி நிறுத்தியிருக்கிறோம்.

இந்தக் கல்லூரி கடந்து அவர்களுக்கான வாய்ப்புகளை பெரிய பெரிய தொழில்களுடன் வழங்கமுடியும் என்ற பெருநம்பிக்கையுடன் பயணிக்கிறோம்.

கர்நாடக சங்கீத வகுப்பு(வாய் பாட்டு) எப்போது ஆரம்பிக்கிறீர்கள்? கீபோட் வகுப்பு எப்போது ஆரம்பிக்கிறீர்கள்? டான்ஸ் கிளாஸ் எப்போது ஆரம்பிக்கிறீர்கள்? ஆங்கில வகுப்பு தொடங்க மாட்டீர்களா? என்று மாணவர்களும் பெற்றவர்களும் அடிக்கடி கேட்கத் தொடங்கிவிட்டார்கள். “விரைவில் விரைவில்“ என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  உண்மையில் ஆசிரியர்களும் மாணவர்களும் காட்டும் ஆர்வத்துக்கு ஈடுகொடுக்க இடம்தான் போதாமல் உள்ளது. அதுவே தாமதத்துக்குப் பெரிய காரணம்.

பனை ஓலை மாலைகள், முத்துமாலைகள் தோடுகள் பொம்மைகள் தயாரித்தல் சிப்பிகளில் அலங்கார வேலை, கால்மிதிகள் தயாரித்தல் போன்ற பல கைவினைத் தயாரிப்புகளை பயிற்றுவிக்கவும் எண்ணியுள்ளோம்.

 

தற்போது இந்தக் கல்லூரி அபிவிருத்தியில் சில நண்பர்கள் நிதியாதரவு நல்கியுள்ளார்கள். அவர்களது ஆதரவுடனேயே இத்தனை விரைவாக சில கட்டுமானங்களைச் செய்ய முடிந்தன.  மேலும் இதனை வலுவாக்கவும் கல்லூரியையும் அதன் பணிகளையும் விரிவாக்கம் செய்யவும்  எமது உறவுகளிடம் நிதியாதரவையும் எதிர்பார்க்கிறோம்.

இன்னும் போரின் நினைவுக்காயங்களோடு வாழும் எமது இளையவர்களின் வாழ்க்கை கலைகளால் மேன்மை  உறுவதற்கு பாடுபடவேண்டிய பொறுப்பு  நம் அனைவருக்கும் உண்டு.  தாயகக் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசியை விட, கல்வி பசியே அதிகம். எனவே அதற்கு நாம் அனைவரும் அவர்களுக்கு உதவினால், நாளை அவர்கள் நல்லதொரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவார்கள் என்பது திண்ணம்.

Exit mobile version