Home உலகச் செய்திகள் வகுப்பின் நடுவே திரை: ஆப்கான் பல்கலைக்கழகங்கள் புதிய நிபந்தனைகளுடன் திறப்பு

வகுப்பின் நடுவே திரை: ஆப்கான் பல்கலைக்கழகங்கள் புதிய நிபந்தனைகளுடன் திறப்பு

ஆப்கான் பல்கலைக்கழகங்கள் நிபந்தனைகளுடன் திறப்பு

ஆப்கான் பல்கலைக்கழகங்கள் நிபந்தனைகளுடன் திறப்பு: தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே ஆப்கானிஸ்தானை படிப்படியாக கைப்பற்றிய தலிபான்கள், கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி தலைநகர் காபூலை தங்கள்வசம் கொண்டுவந்தனர்.

இதனையடுத்து அமெரிக்க மற்றும் மேற்கத்தியப் படைகள்   ஓகஸ்ட் 31 ம் திகதி முழுமையாக அங்கிருந்து வெளியேறியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 1990களில் இருந்ததுபோல் தலிபான்கள் கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து இயல்பை முடக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக  இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.

கடந்த முறை தலிபான் ஆட்சியின் போது பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே வரக்கூடாது. பெண்கள் கல்வி கற்கவோ, வேலை செய்யவோ அனுமதிக்கக் கூடாது. சினிமா, எழுத்து உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடக் கூடாது என்பது தலிபான்களின் சட்டமாக இருந்தது. மீறுவோர் மிக மோசமான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆனால், இம்முறை ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் தாமாகவே முன்வந்து இந்த முறை எங்களின் ஆட்சி முன்பு போல் இருக்காது என்று கூறினர். பெண் கல்வியை அனுமதிப்போம் என்றனர். பெண்கள் கல்வி கற்க அனுமதித்திருந்தாலும் கூட பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளனர்.

பல்கலைக்கழக வகுப்பறைகளில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே அமர வைக்கப்பட்டு நடுவில் ஒரு திரையும் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வகுப்புகள் முடிந்ததும் முதலில் பெண்கள் வெளியேற வேண்டும். அதன் பின்னர் 5 நிமிடங்கள் கழித்தே மாணவர்கள் வெளியேற வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டே பாடம் எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் கண்களைத் தவிர முகத்தை முழுமையாக மூடும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெண்களை மதிப்போம் என்று தலிபான்கள் கூறியிருந்தாலும் கூட இதுபோன்ற கெடுபிடிகளும், கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதும் போன்ற தலிபான்களின் நடவடிக்கை தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

நன்றி – இந்து தமிழ் திசை

Exit mobile version