ஒரு இலட்சம் தானா எனது பிள்ளையின் பெறுமதி-  கோகிலவாணி கேள்வி

ஒரு இலட்சம் தானா எனது பிள்ளையின் பெறுமதி

ஒரு இலட்சம் தானா எனது பிள்ளையின் பெறுமதி என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி இராமநாதன் கோகிலவாணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று எங்களுடைய போராட்டம் 5 வருடங்களையும் கடந்து வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு இலட்சம் ரூபா வாழ் வாதாரமும், மரணச்சான்றிதழும் மரணச்சான்றிதழை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களிற்கு காணாமல் போனோர் சான்றிதழ் வழங்குவதாகவும் நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார்.

எங்களது உறவுகள் கிடைக்கும் வரை போராடிவரும் எமது போராட்டத்தை மழுங்கடிக்கவே இந்த தீர்வை அவர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள். பொருட்களின் விலைகள் அதிகரித்து உணவின்றி மக்கள் உயிரிழக்கும் வேளையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு ஒரு இலட்சம் ரூபா வாழ்வாதாரம் வழங்க முன்வந்திருக்கின்றார்.

இந்த வேளையில் அவர் இவ்வாறான வாழ்வாதாரத்தை கொடுக்க முன்வந்திருப்பது தொடர்பில் எமக்கு விளங்கவில்லை. எமது போராட்டத்தை மழுங்களிடிக்கவே இவ்வாறு உதவ முன்வந்துள்ளதாக நாங்கள் விளங்கிக்கொண்டிருக்கின்றோம். எமது உறவுகள் இவர்களது ஒரு லட்சம் ரூபாவை வாங்குவதற்கும், மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை.  இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத்தர வேண்டும். இவர்களால் தரமுடியாதுப போனால் சர்வதேசம் எமது உறவுகளை கண்டுபிடித்து தர வேண்டும்” என்றார்

Tamil News