காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் இழப்பீட்டுக்கான அலுவலகமே – அனந்தி

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை இழப்பீட்டுக்கான  அலுவலகமாகவே  அதனை பார்க்கின்றோம் என ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின்  தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் நடைபெற்ற போர் சூழலில் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டும், அவர்களிடம் சரணடைந்தும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கான நீதியைக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பில் இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன்,

 “காணாமல் போனோர் தொடர்பில் ஒரு இடத்திலும் நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது. ஏனென்றால் 2009ம் நடைபெற்ற போரில் சரணடைய கொடுத்து விட்டு கண்கண்ட சாட்சியங்களாக இருக்கின்ற போது இழப்பீட்டைத்  தந்து அல்லது மரணச்சான்றிதழை தந்து  எங்களுடைய பிரச்சினைக்கு முடிவு கட்டிவிடலாம் என்று அரசாங்கம் ஒருபோதும் நினைக்ககூடாது.

சர்வதேச மத்தியஸ்தத்துடன் விசாரணை செய்ய வேண்டும். இங்கே நீதித்துறை பலவீனப்பட்டதென்ற அடிப்படையில் தான் நாங்கள் அரசாங்கத்தினை நம்பாது இருக்கின்றோம். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற ஒரு பொறுப்பு கூறல்  இல்லாமல் ஒரு பொழுதும் இணக்கப்பாட்டிற்கோ அல்லது விட்டுக்கொடுப்புக்கோ போக முடியாது” எனத் தெரிவித்தார்.

Tamil News