இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்-அருட்தந்தை மா.சத்திவேல்

அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்

இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்: சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்” எனும் அறிவித்தலை வடகிழக்கு ஆயர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கௌரவத்தோடு வேண்டுகோள் விடுக்கின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம்மாதம் 20ஆம் திகதி “மதங்களைக் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்” என வடகிழக்கு ஆயர்கள் கூட்டாக அறிவித்திருப்பது தமிழர் தாயகம் மீது அரசியல் தாகம் கொண்டவர்களை, மாவீரர்களை தியாகிகளாக ஆத்மீக ரீதியில் உணர்வுபூர்வமாக அர்ச்சித்து எழுச்சியோடு நினைவு கூருபவர்களை பல்வேறு சந்தேகத்திற்கும் வேதனைக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கி இருப்பதால் இவ்வறிவித்தலை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

மே மாதம் 18ஆம் திகதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தம் உறவுகளை வடகிழக்கு மக்களும் , புலம்பெயர் தமிழர்களும் அஞ்சலி செலுத்துகின்றனர். அத் தினத்தில் அரசியல் நீதிக்கான அவசரத்தையும் வலியுறுத்தி செயற்படுகின்றனர். கத்தோலிக்கத் திருச்சபை அருட்தந்தையர்களும் நினைவு கூர்தலில் துணிச்சலோடு முன் நின்று செயல்பட்டு கொள்கின்றனர். அதுமட்டுமல்ல முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அடிகளார் தமிழர்களின் அரசியல் குரலாக ஒலித்தவர் இவர்களை நன்றியோடு பார்க்கின்றனர் தமிழர்கள்.

இந்நிலையில் மாவீரர் வாரம் என்பது இறந்தவர்களை நினைவு கூறும் காலம் அல்ல. தமிழர்களின் தாயக அரசியலுக்காக உயிர்த்தியாகமானவர்களை, தமிழர் தாயக மண்ணில் வித்தாகி தமிழர் உள்ளங்களில் உயிர்ப்போடு வாழ்ந்து எமது அரசியலை இன்னும் கூர்மைப்படுத்தகின்ற தியாகிகளுக்கு தியாகச் சுடரை ஏற்றி கௌரப்படுத்துகின்ற வாரமாகும்.

இத்தகைய புனித வாரத்தின் முதல் நாள் இறந்தவர்களை நினைவு கூருவோம் என அழைப்பு விடுப்பது மாவீரர் குடும்பங்களையும், அவர்களை தியாகிகளென, புனிதர்களென நினைக்கன்றவர்களை மட்டுமல்ல மாவீரர்களையும் அவர்கள் எந்த அரசியலுக்காக தியாகமானார்களோ அந்த அரசியலையும் அவமதிக்கின்ற செயலுமாகும்.

தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் உயிர்த் தியாகிகள் ஆன அருட்தந்தையர்கள் போராட்டக் களத்தில் நின்றவர்கள் என நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்கள் உள்ளனர் அதேபோன்று காணாமற்போன கத்தோலிக்கர்களும் உள்ளனர் இவர்களுக்காக நினைவுநாளை அறிவிக்காத திருச்சபை மாவீரர் வாரத்தின் முதல் நாள் நினைவு நாளாக அறிவித்தது ஏன்?

தமிழர் தாயகத்தையும் தமிழர் தாயக தேசிய அரசியலையும் சிதைக்க சர்வதேச சக்திகளும் உள்ளூர் சக்திகளும் கைகோர்த்து நிற்கின்ற காலம் இது தமிழர்கள் 30 வருடங்களுக்கு முன்பே ஏற்றுக்கொள்ளாத மாகாணசபையை முழுமையாக உட்படுத்துமாறு அழிவு சக்திகள் கூடுகின்ற காலங்களில் இன்னும் ஒரு பக்கம் ஒரே நாடு ஒரே சட்டம் என இனவாத காவியின் கையில் இனஅழிப்பை தீவிரமாக திட்டமிடுகின்றனர்.

இந்நிலையில் இறந்தவர்களை நினைவு கூர மாவீரர் வாரத்தின் முதல் நாளை அறிவிப்பதன் மூலம் ஆயர்களும் எமக்கு எதிரான சக்திகளோடு மறைமுகமாக கைகோர்த்து எனது அரசியல் உணர்வையும் தியாக வரலாற்றையும் நீர்த்துப்போகச் செய்வதற்கான செயற்பாடுகளில்  ஈடுபடுகின்றார்களா என சந்தேகம் கொள்ள வைக்கின்றது.

அத்தோடு வேறு சமயத் தலைமைகளையோ, பொது அமைப்புக்களையோ கலந்துரையாடாது இத்தகைய பொது அறிவித்தலை விடுப்பது அவர்களை அவமதிப்பதாக அமைந்திருப்பதோடு தன்னிச்சையாக அறிவிப்பு செய்திருப்பது தமிழர்கள் மத்தியில் இன்னுமொரு பிளவையும் ஏற்படுத்திவிடலாம் என்பதையும் சிந்திக்க தவறியது வேதனைக்குரியது.

ஆதலால் மாவீரர் வாரத்தின் புனிதம், மாவீரர்களின் தியாக வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் செயற்பாடு, தாயக அரசியலுக்கான கூட்டு செயற்பாடு என்பன கருதி “சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்” எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கௌரவத்தோடு வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்-அருட்தந்தை மா.சத்திவேல்