நுவரெலியாவில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்பு பலகைகள் – பொதுமக்கள்,சாரதிகள் கண்டனம்

அதிகளவு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் வருகை தரும்  நுவரெலியா பிரதான நகரில் நுவரெலியா – பதுளை வீதியில் இரண்டு இடங்களில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தூரப் பிரதேசங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்குள் உள்ளே நிறுத்தப்படாமல் நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் பேருந்து நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்விடத்தில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிங்கள மொழி தெரியாதவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உடனடியாக போக்குவரத்து காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்படுவதால் சாரதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசின் மும்மொழிக் கொள்கைக்கு சம அந்தஸ்து வழங்கி மும்மொழிகளிலும் அறிவிப்புப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு பொது மக்கள் மற்றும் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.