இணை தலைமைத்துவம் வகிப்பது தொடர்பில் இன்னும் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை – ஜப்பான்

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் நடைபெறும் மாநாட்டின் போது இணை தலைமைத்துவம் வகிப்பது தொடர்பில் இன்னும் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என ஜப்பான் கூறுவதாக Rauters செய்தி வௌியிட்டுள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தின்  சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி  Rauters செய்தி வௌியிட்டுள்ளது.

நாம் அவ்வாறான இணக்கப்பாட்டிற்கு வரவில்லை.  அவர்கள் அதனை எதிர்பார்க்க முடியும். எனினும், நிலைமையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், ஜப்பான் இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதனை திருத்தி மீண்டும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

திருத்தப்பட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பிற்கு ஜப்பான் ஒத்துழைப்பு வழங்கும்.  இலங்கைக்கான கடன் வழங்குநர்களின் மாநாட்டில் இணை தலைமைத்துவம் வழங்குமாறு இலங்கை ஜப்பானிடம் கோரியுள்ளது.