வடக்கு கிழக்கு தமிழர்கள் உள்ளூராட்சி தேர்தலை ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் – கஜேந்திரகுமார்

தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்னேஸ்வரன் அணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள்  போலித் தமிழ் தேசிய வாதிகள் ஆகியோரை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சமகாலநிலை  தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலை அறிவித்து பின்னர் வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை இழுத்தடிக்க முற்படலாம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதாக இருந்தால் நிலையான அரசாங்கம் அமையவேண்டுமென சர்வதேச நிதி நிறுவனங்கள் விரும்புகின்றன.

பாராளுமன்ற தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவது நெருக்கடியை அதிகரிக்கும். ஆனால்வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும்.

ஒற்றையாட்சிக்குள் ஏக்கியராஜ்ஜியவை ஏற்றவர்கள் 13ம் திருத்ததை ஏற்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினவர்கள் வாக்குபெறுவதற்காக தற்போது தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்னேஸ்வரன் அணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள்  போலித் தமிழ் தேசிய வாதிகள் ஆகியோரை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.