“எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்“- அல் காய்தா தலைவர் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் கருத்து

Justice has been delivered': US president Joe Biden announces killing of al-Qaeda leader

எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்; எங்கு ஓடினாலும் தப்ப முடியாது என்று அல் காய்தா தீவிரவாத கும்பல் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

அல்-காய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்-காய்தா அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி. இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சில நேரங்களில் குறிப்பாக, இந்திய விவகாரங்களில் வீடியோக்களில் தோன்றி பேசிவந்தார்.

அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பதுங்கியிருந்தார். ட்ரோன் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர், “அல் ஜவாஹிரி பதுங்கியிருக்கும் இடத்தை அறிந்துவிட்டதாக தகவல் வந்ததும். அவரை அழிக்கும் ஆபரேஷனுக்கு நான் அனுமதி கொடுத்தேன். அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதால் அமெரிக்காவில் செப்டம்பர் 11ல் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 பேரின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.