பேச்சுவார்த்தைக்கான அழைப்பு ஜனாதிபதியிடம் இருந்து வரவில்லை: தமிழ் கட்சிகள் தெரிவிப்பு

தமிழ் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்த போதிலும் இதுவரை தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் தமிழ் கட்சிகளுடன் பேசுவதற்கு தயார் என வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த கலந்துரையாடல் தொடர்பில்  ஜனாதிபதியிடம் இருந்து தமக்கு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அழைப்பும் வரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கான திகதியை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில், தங்களுக்குள் கலந்துரையாடி அடுத்த கட்ட  செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன்  தெரிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், உத்தியோகபூர்வமாக எவ்வித அழைப்பும் இதுவரை விடுக்கப்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.