முதல் தடவையாக தென் கொரிய எல்லையை கடந்து சென்ற வட கொரிய ஏவுகணை

வடகொரியா இன்று பத்துக்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவியதாகவும் அவற்றில் ஒன்று தென் கொரியாவின் கடற்பரப்பில் வீழ்ந்ததாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.

இது ஒரு படையெடுப்பு போன்றதாகும் என தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் விமர்சித்துள்ளார்.

வடகொரிய ஏவுகணையொன்று இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையை இந்த ஏவுகணை கடந்து சென்றதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

கொரியா 1953 ஆம் ஆண்டு இரு நாடுகளாக பிரிக்கப்பட்ட பின்னர், இவ்வாறு கடல் எல்லைப் பகுதியை ஏவுகணையொன்று கடந்து சென்றமை இதுவே முதலர் தடவையாகும் என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது,

தென் கொரியாவின் கிழக்கு கரையோரப் பகுதிக்கும் உலேயுனங்கோடா தீவுக்கும்  அருகிலலுள்ள கடற்பகுதியில் இந்த ஏவுகணை வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை காரணமாக தென் கொரியாவின் உலேயுனங்கோடா தீவின் வான் பாதுகாப்பு அபாய எச்சரிக்கை அலாரம்கள் ஒலித்தன. வடகொரியாவின் இந்த ஏவுகணை தொடர்பில் தென் கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வட கொரியாவின் ஏவுகணைகள் ஏவப்பட்ட பின்னர். இரு நாடுகளுக்கும் கடல் எல்லைப் பகுதிக்கு அருகில் வானிலிருந்து 3 ஏவுகணைகளை தான் ஏவியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் இராணுவப் பயிற்சிகளை நிறுத்தாவிட்டால் ‘வலிமையான நடவடிக்கைகள்’ மேற்கொள்ளப்படும் என வடகொரியா நேற்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.