மியான்மரில் வரும் 2023க்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மரில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது.
மேலும் ஆட்சி கவிழ்ப்பின் மூலம் கைது செய்யப்பட்ட அந்நாட்டுத் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப் பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடு காரணமாக ஆட்சியை கவிழ்த்ததாக இராணுவம் கூறுகிறது.
இந்நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை இராணுவம் கொடூரமாக அடக்கிவருகிறது. இதில், 900க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
அத்தோடு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர். மேலும் பொருளாதாரம் 18 சதவீதம் வரை சரியும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.
இந்நிலையில், இராணுவ ஆட்சியின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப் படுவதாகவும், ஓகஸ்ட் 2023க்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவசர நிலை நீக்கப்படும் எனவும் இராணுவம் அறிவித்துள்ளது.