மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 27ம் திகதி விளக்க மறியலில் வைக்க வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே18ம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு லவக்குமாருக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில், அவர் உட்பட 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவல் துறை பிரிவில் உள்ள நாகர் வட்டை கடற் கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி அதனை படம் எடுத்து முகநுாலில் பதிவு செய்த குற்றச் சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இது குறித்து நடை பெற்று வரும் வழக்கில், இன்றைய தினம் 10 பேரின் சார்பில் மூத்த சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் கனகரத்தினம் சுகாஸ் ஆஜராகிய நிலையில், அவர்களை தொடர்ந்தும் 27ம் திகதி வரையில் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.