மலேசியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் 

மலேசியாவுக்குள் ஆவணங்களின்றி நுழைந்த வெளிநாட்டினரை சேர்ந்த 1,179 குழந்தைகள் நாடெங்கும் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.

அவரின் கூற்றுப்படி, ஜனவரி 29 கணக்குப்படி குழந்தைகள் உள்பட மொத்தம் 15,845 ஆவணங்களற்ற வெளிநாட்டினர் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 2,683 பெண்களாவர்.

இதில் அதிகபட்சமாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 5,138 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இத்துடன் ரோஹிங்கியாக்கள் உள்பட மியான்மரைச் சேர்ந்த 4,424 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த 4,097 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில் 22,804 ஆவணங்களற்ற வெளிநாட்டினரும் அவர்களுக்கு வேலை வழங்கிய 371 பேரும் மலேசிய குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.