உலக பௌத்த உச்சி மாநாட்டை தொடங்கி வைக்கிறார் இந்திய பிரதமர்

இரண்டு நாள் உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, லாவோஸ், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக இந்திய மத்திய கலாசார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் திபேத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவும் பங்கேற்பார் என்று எதிர்பார்ப்பதாகவும், இன்னும் அவரின் வருகை உறுதிச்செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கலாசார அமைச்சு மற்றும் சர்வதேச பௌத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 150 பிரதிநிதிகளும், வெளிநாட்டிலிருந்து 171 பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.