ஒரு இலட்சம் ரூபாயை தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்கே நீதியமைச்சர் முயல்கின்றார்-சி.ஜெனிற்றா

நீதியை இல்லாமல் ஒழிப்பதற்கே நீதியமைச்சர்

ஒரு இலட்சம் ரூபாயையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்கே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக் கொண்டிருக்கின்றார் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நீதி அமைச்சரின் நடமாடும் சேவையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் என நாங்கள் கூறியிருந்தோம். இழப்பீடோ, மரணச் சான்றிதழோ தேவையில்லை என கூறியிருந்தோம். அப்படியிருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீது திடீரென  ஏன் அக்கறை வருகின்றது.

ஒரு இலட்சம் ரூபா நிதியினை எமது உறவுகளுக்கு வழங்கி அந்த நிதியில் வாழ்க்கை செலவை கட்டியெழுப்ப முடியுமா? இந்த நிதியில் எமது உறவுகள் வாழ முடியுமா? நீதிக்காக இதுவரை காலமும் போராடி கொண்டிருந்தோமே தவிர ஒரு இலட்சம் ரூபாவிற்காக போராடவில்லை.

யுத்தம் முடவடைந்து 13 வருடங்களை கடந்தும் எமது உறவுகளை தான் தேடிக்கொண்டிருக்கின்றோம்.  உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கி உறவுகளை திருப்திப்படுத்துவதாக நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார்.

எமது உறவுகள் நிதிக்காக போராடவில்லை. நீதி அமைச்சர் அலிசப்ரி கூறுகின்ற கூற்றையும், பதிவாளர் நாயகம் எடுத்திருக்கின்ற இந்த முடிவும் தவறானது. ஏனென்றால் நாங்கள் 13 வருடமாக தொடர்ச்சியாக வீதியோரத்தில் நின்று நிதிக்காகவோ, காணாமல் போனவர்களுக்கான சான்றிதழிற்காகவோ போராடவில்லை. எமக்கு நீதி தான் தேவையென்றே போராடி வருகின்றோம்.

சர்வதேசமானது இதனை கண்டித்து 49 ஆவது கூட்ட தொடரிலாவது எமக்கு நீதி வழங்க ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையிலே காத்திருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News