Home செய்திகள் உயிரோடில்லாதவர்களை கேட்டால் எப்படி தருவது என்று நீதி அமைச்சர் கேட்கின்றார் – எமது உறவுகளிற்கு என்ன...

உயிரோடில்லாதவர்களை கேட்டால் எப்படி தருவது என்று நீதி அமைச்சர் கேட்கின்றார் – எமது உறவுகளிற்கு என்ன நடந்தது?

உயிரோடில்லாதவர்களை கேட்டால் எப்படி தருவது

உயிரோடில்லாதவர்களை கேட்டால் எப்படி தருவது என்று நீதி அமைச்சர் கேட்கின்றார் எனில் கையளிக்கப்பட்ட எமது உறவுகளிற்கு என்ன நடந்தது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க உப செயலாளர் ரத்தீஸ்வரன் கவிதா கேள்வி எழுப்பியுள்ளார். 

கிளிநொச்சியில் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள போராட்ட ஏற்பாடுகள் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்  நீதி அமைச்சர் தெரிவித்த கருத்தானது கலங்க வைத்துள்ளதாகவும், 11 ஆண்டுகளிற்கு மேலாக எமது உறவுகளை தேடி போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், எமது உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் சர்வதேசம் நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதை விலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அனைவரும் பங்கு கொண்டு ஆதரவினை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இதேவேளை அங்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க உப செயலாளர் ரத்தீஸ்வரன் கவிதா,

இராணுவத்தினர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களை சரணடையுமாறும், விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்வதாகவும் தெரிவித்த நிலையில், எனது கணவர் இராணுவத்தினரிடம்  சரணடைந்தார். அவர் மாத்திரமல்லாது எனது கண் முன்பாக மூன்று பேருந்துகளில் இராணுவத்தினர் பலரை ஏற்றி சென்றனர்.

இந்த நிலையில் நீதி அமைச்சர் எமது உறவுகள் உயிருடன் இல்லை என தெரிவித்துள்ளார். அப்படியாயின் எமது உறவுகளிற்கு என்ன நடந்தது? அவர்களை கொலை செய்துவிட்டீர்களா? இலங்கை அரசாங்கத்திடம் எமக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதியை கோரி நிக்கின்றோம்” என்றார்.

 

Exit mobile version