‘இலங்கைக்குள் இந்திய இராணுவம்’ என்ற செய்தியில் உண்மை இல்லை: பாதுகாப்பு செயலாளர்

இலங்கைக்குள் இந்திய இராணுவம்

இலங்கைக்குள் இந்திய இராணுவம் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் செய்தியை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் இடம்பெற்ற இந்தோ – சிறீலங்கா ஒன்றிணைந்த போர் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படமே, குறித்த உண்மைக்கு புறம்பான செய்தியில் பகிரப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெறும் இருதரப்பு ஒன்றிணைந்த போர் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இராணுவத்தினர் இலங்கையின் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு நோக்கங்களுடன் பகிரப்படும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எந்தவொரு நிலைமைக்கும் முகங்கொடுப்பதற்கு முப்படையினரும் தயாராக  உள்ளதாகவும்  பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அதே நேரம் இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் அப்பட்டமான பொய்யானதும் முற்றிலும் ஆதாரமற்றதுமான செய்திகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம்  நிராகரித்துள்ளது.