உலகை உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இன்று வரை உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டும் மக்கள் தமது உறவுகளை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தி வரும் நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
யாழ். பல்கலையில் ஆழிப்பேரலையின் நினைவேந்தல்
ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் இன்று திங்கட்கிழமை (டிச 26) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகம்
ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் தேசிய பாதுகாப்பு தினமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள சுனாமி நினைவாலயத்திலும், முல்லைத்தீவு கள்ளப்பாடு மைதானத்திலும், புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்திலும், கள்ளப்பாடு பாடசாலையிலும் உணர்வுபூர்வமாக அஞ்சலிகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு
ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
சுமார் 1800 பேர் பலியான திருச்செந்தூர், நாவலடி, டச்பார் போன்ற கரையோர பிரதேசங்களில் உள்ள சுனாமி நினைவுத்தூபிகளில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களது உறவினர்கள் கதறியழுது மலரஞ்சலி செலுத்தினர்.
கிண்ணியா
கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுனாமி நினைவுதினமானது கிண்ணியா கடற்கரையில் உள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது
சுனாமியால் வெகுவாக பாதிக்கப்பட்ட மக்கள் குடியேற்றப்பட்டுள்ள சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் ஹிஜ்ரா மஸ்ஜித்தில் கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வும் விசேட துஆ பிரார்த்தனையும் பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை
பாசிக்குடா வலம்புரி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மௌன இறைவணக்கம், நினைவுச் சுடர் ஏற்றல், மத வழிபாடுகள், அன்னதானம் ஆகியன இடம்பெற்றதோடு, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டன.
அம்பாறை – மாளிகைக்காடு
அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு, ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த துஆ பிராத்தனையானது, மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.
மலையகம்
இன்று (திங்கட்கிழமை) ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் சுனாமி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.