Home செய்திகள் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு நாள்: படுகொலை செய்த பின்பும் அவர்களை நினைவு கூரமுடியாத நிலை-பா.அரியநேத்திரன்

ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு நாள்: படுகொலை செய்த பின்பும் அவர்களை நினைவு கூரமுடியாத நிலை-பா.அரியநேத்திரன்

ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு நாள்

படுகொலை செய்த பின்பும் அவர்களை நினைவு கூரமுடியாத நிலை- ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு நாள்: “படுகொலை செய்த பின்பும் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரமுடியாத நிலை இன்று இலங்கையில் காணப்படுகின்றது.இதற்கான தீர்வு என்பது இலங்கை அரசாங்கத்தின் ஊடாக கிடைக்காது என்பதை நாங்கள் எப்போதே உணர்ந்துவிட்டோம்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் நாள் இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் அவரது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது தந்தை மற்றும் மருமகன் ஆகியோரும்  படுகாயம் அடைந்திருந்தனர்.

நிமலராஜன்,  தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில், பிபிசி தமிழோசை,அதன் சிங்கள சேவையான சந்தேசிய உள்ளிட்ட வானொலிகள், நாளிதழ்கள், ராவய உள்ளிட்ட தமிழ் சிங்கள வார இதழ்களென அவர் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் மட்டு.ஊடக அமையத்தில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,

“நிமலராஜன் 2000ஆம் ஆண்டு இதே தினத்தில் படுகொலைசெய்யப்பட்டார்.அவர் கொலைசெய்யப்படுவதற்கு முன்பே 1985ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தேவராஜா என்னும் ஊடகவியலாளர் முதன்முதலாக படுகொலைசெய்யபட்டார்.

நிமலராஜன் 2000ஆம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்டதன் பின்னர்தான் ஊடகவியலாளர்கள் மத்தியில் எழுச்சியும் இவ்வாறான ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பிலான அச்ச உணர்வினையும் ஏற்படுத்தியிருந்தது.

நிமலராஜன்  ஏன் படுகொலைசெய்யப்பட்டார்? என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.எனினும் யாழ் மாவட்டத்தில் அக்காலத்தில் நடந்த தேர்தலின்போது அங்கு தேர்தலில் போட்டியிட்ட தமிழ் கட்சியொன்றை சேர்ந்தவர்கள் மேற்கொண்ட தேர்தல் மோசடியை அவர் வெளி உலகுக்கு கொண்டுவந்தார். அதன்காரணமாக பல அச்சுறுத்தல்கள் அவருக்கு வந்துகொண்டிருந்தது.இவ்வாறான நிலையிலேயே அவர் பிபிசி சிங்கள சேவைக்கு செய்தினை வழங்கிய பின்னர் அவர் வீட்டில்வைத்து இரவு 10.00மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை நடைபெற்றபோது முதலாவது ஊடகவியலாளர் படுகொலையென்று கருதப்பட்டதன் காரணமாக சந்தேகத்தின்பேரில் 10பேர் கைதுசெய்யப்பட்டார்கள். அதில் முக்கிய சந்தேக நபராக இருக்ககூடிய ஒருவரை அங்கிருந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தனர். அதன் காரணமாக அந்த விசாரணைகள் இடையில் முடக்கப்பட்டு,கைதுசெய்யப்பட்டவர்களும் விடுவிக்கப்பட்டதாக அப்போது செய்திகள் வெளிவந்தன.

அரசியல் செல்வாக்கினைக்கொண்டு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஊடகவியலாளர் நிமலராஜனை படுகொலைசெய்தார்கள் என்று பரவலாக கூறப்பட்டது.யார் அந்த கொலைசெய்தார்கள் என்று பெயர் குறிப்பிட்டும் கூறப்பட்டது.அவர் வெளிநாட்டுக்கு சென்றதாக ஊடகங்களில் செய்திவந்தது.

1985ஆம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்ட தேவராஜா தொடக்கம் தொடர்ச்சியாக 44ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள்.இதில் 35தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள்,07சிங்கள ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள்,02இஸ்லாமிய ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த 44ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பிலும் தொடர்ச்சியாக நாங்கள் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கைகளை விடுத்தாலும் கூட எந்த சந்தேக நபர்களும் கைதுசெய்யப்படவில்லை,கைதுசெய்யப்பட்டவர்களும் விடுதலைசெய்யப்பட்ட வரலாறே இருக்கின்றது.

2008ஆம் ஆண்டு சர்வதேச ஊடக மையத்தினால் 173நாடுகளைக்கொண்ட பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.அதில் ஊடக சுதந்திரத்தினை மீறுகின்ற நாடுகள் வரிசையில் 165வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது இலங்கை.

2010ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படாவிட்டாலும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படமுடியாத நிலையே காணப்படுகின்றது. இன்று ஊடகவியலாளர்களை நினைவு கூர முடியாத நிலையே உள்ளது.  இவ்வாறான அடக்குமுறை எந்த அரசாங்கம் வந்தாலும் இருந்துகொண்டிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version