பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் – ஜனநாயகத்திற்கான குரல் அமைப்பு

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல் என்ற  அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியுமே பிரதான விடயங்கள் என   இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை ஒரு தசாப்தகாலமாக பெருந்துயரங்களை துன்பங்களை அனுபவித்துள்ளது என தெரிவித்துள்ள ஜனநாயகத்திற்கான குரல் அமைப்பு கடந்தகால தவறுகளை சரி செய்து சரியான சட்டமூலத்தை உருவாக்குவது தற்போதைய  பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள்  என்ற அடிப்படையில் தார்மீக உறுதியுடனும் நேர்மையுடனும் சரியானதை செய்யுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு  அரசியல் நேர்மை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை ஆகியவை சுயநலத்திற்கு எதிராக வெற்றிபெறும் என நாங்கள் நம்புகின்றோம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.