ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் – ஜனாதிபதி ரணில் இடையே சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா உள்ளிட்ட தூதுக்குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (4) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபித்தல் உட்பட அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகமும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளருமான கன்னி விக்னராஜா, இலங்கையின் சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களைப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.