யாழ். மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 5,000 ரூபா வழங்க நடவடிக்கை – க.மகேசன் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமார் 1 இலட்சம் பேருக்கு 5ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள 78 ஆயிரத்து 442 சமுர்த்திப் பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் வங்கிகளில் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சமுர்த்தி பயனாளிகளுக்கு 5ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் அதே நேரம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 27 ஆயிரத்து 978 பேருக்கு அரசாங்கத்தின் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் 1-2  நபர்களை கொண்ட குடும்பத்திற்கு 5ஆயிரம் ரூபாவும், மூன்று நபர்களை கொண்ட குடும்பத்துக்கு 6400 ரூபாவும், நான்குக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட குடும்பங்களுக்கு 7500 ரூபாவாகவும் சமூர்த்திக் கொடுப்பனவுடன் வழங்கப்படவுள்ளது.

அதேநேரம் யாழ் மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வயது முதிர்ந்தவர்கள் பட்டியலில் காணப்படும் நிலையில் அவர்களுக்கும் கொடுப்பனவை  வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

யாழ் மாவட்டத்தில் எரிவாயு விநியோகத்தை முறையாக மேற்கொள்வதற்கு உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவிலே கிடைக்கப்பெறுகின்றது.

ஆகவே கிடைக்கப் பெறுகின்ற எரிவாயு சிலிண்டர்களை தேவையின் அடிப்படையில் பகிரந்தளிப்பதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tamil News