இலங்கையில் அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் – கறுப்பு ஜூலையை முன்னிட்டு கனடா பிரதமர் அறிக்கை

Trudeau 0 இலங்கையில் அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் – கறுப்பு ஜூலையை முன்னிட்டு கனடா பிரதமர் அறிக்கை

இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுவதற்கு அனைவரினதும் நம்பிக்கையை பெறக் கூடிய அர்த்த பூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் சிறீலங்கா அரசால் முன்னெடுக்கப் பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக  1983ம் ஆண்டு ஜுலை மாதம்  நடைபெற்ற  வன்முறைகள் கறுப்பு ஜுலை என  தமிழர்களினால் நினைவு கூரப்படுகின்றன.

இந்த கலவரம் ஏற்பட்டு 38 வருடங்களாகின்றதை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

இன்று நாங்கள் கனடாவை சேர்ந்த தமிழர்கள் மற்றும் உலகலாவிய ரீதியில் உள்ள தமிழ் சமூகத்தினருடன் இணைந்து இலங்கையின் பயங்கரமான கறுப்பு ஜுலை சம்பவங்களை நினைவு கூருகின்றோம். 1983 ஜுலை மாதம் நீண்டகால பதற்றமும் அமைதியின்மையும் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இறுதியில் தமிழர்களிற்கு எதிரான படுகொலைகளாக மாறியது –பின்னர் நாட்டை 26 வருட ஆயுத மோதலிற்குள் தள்ளியது.

ஆயுதமோதல் பல ஆயிரக் கணக்கானவர்களை கொன்றது பலரை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது, நாட்டின் சமூகத்தினர் மத்தியில் ஆறாத காயங்களை ஏற்படுத்தியது. கறுப்பு ஜூலைக்கு பிந்தைய மாதங்களில் கனடாவை சேர்ந்த தமிழர்களின பரப்புரை காரணமாக கனடா அரசாங்கம் விசேட திட்டங்களை நடைமுறைப் படுத்தியது, இது 1800 தமிழர்கள் கனடாவில் குடியேறுவதற்கும் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்ப கட்டியெழுப்பு வதற்கும் உதவியது.

இன்று கனடா தமிழர்கள் புலம் பெயர் சமூகத்தின் பெரும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். மேலும் அவர்கள் வலுவான அனைவர்களையும் உள்ளடக்கிய கனடாவை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.

கனடா அரசாங்கத்தின் சார்பில் கறுப்பு ஜூலையின் போதும் அதன் பின்னரும் துயரங்களை அனுபவித்தவர்களுக்கும் உறவுகளை இழந்தவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆயுத மோதல் 2009 இல் முடிவிற்கு வந்தது எனினும் நாட்டில் உள்ள அனைவருக்கும் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் பாடுபட வேண்டும். இதற்கு பாதிக்கப்பட்ட அனைவரினதும் நம்பிக்கையை பெறக்கூடிய அர்த்த பூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம். இந்த இலக்கை நோக்கி பாடுபடும் அனைவருக்கும் கனடா தனது ஆதரவை வழங்குகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021