Tamil News
Home செய்திகள் மே-18 முள்ளிவாய்க்காலில் காவல்துறையினர் இடையூறு செய்யாதிருக்க பணிக்கவும் – பிரதமருக்கு சிவஞானம் கடிதம்

மே-18 முள்ளிவாய்க்காலில் காவல்துறையினர் இடையூறு செய்யாதிருக்க பணிக்கவும் – பிரதமருக்கு சிவஞானம் கடிதம்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு அஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை முல்லைத்தீவு காவல்துறையினருக்கு வழங்குமாறு கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை பிரதமருக்கு சிவஞானம் அனுப்பி வைத்துள்ளார். அந்தத் கடிதத்தில்,

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் ஆயுதப் படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை கூட்டாக நினைவு கூர்ந்து அஞ்சலி செய்வது தாங்கள் நன்றாக அறிந்ததே. இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் என்ற வகையில் வன்முறையால் கொல்லப்பட்ட ஆன்மாக்களின் சாபம் பற்றி நாம் அறிவோம்.

இந்த நாட்டை இந்த ஆன்மாக்களின் சாபம் சுற்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது தெளிவானது. கர்மவினையின் தாக்கங்களே இந்த நாட்டை தாக்குகின்றது என்பதும் தெளிவு. இந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்வதால் அவை அமைதி பெறுகின்றன என்பது எமது சமய நம்பிக்கையாகும்.

இறுதியாக படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் மேற் குறிப்பிட்டவாறு மரணித்த ஆன்மாக்களுக்கு அமைதியான முறையில் 18.05.2022 ஆம் திகதி அஞ்சலி மற்றும் பிரார்த்தனை செய்ய தமிழ் மக்கள் மிகவும் தீர்மானமாக உள்ளனர்.

எனினும், முல்லைத்தீவு காவல்துறையினர் இதனை தடை செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை கவலைக்குரியது. இது மிகவும் துரதிஷ்டவசமானதும், எமது அடிப்படை சமய மற்றும் சமூக உரிமைகளை மறுக்கும் செயலாகும்.

ஆகவே இந்த விடயத்தில் தாங்கள் தலையிட்டு, 18.05.2022 ஆம் திகதி புதன்கிழமை முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரர்த்தனை நிகழ்வு களில் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை முல்லைத்தீவு காவல்துறையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு வேண்டுகின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version