Tamil News
Home செய்திகள் தியாகி திலீபன் நினைவு தின அனுஷ்டிப்பு விவகாரம் : நீதிமன்றில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பு

தியாகி திலீபன் நினைவு தின அனுஷ்டிப்பு விவகாரம் : நீதிமன்றில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பு

தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்தமை தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி 11ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்குமாறு நீதிமன்றம் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

எம்.கே சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (டிச. 30) சென்ற வல்வெட்டித்துறை காவல்துறையினர் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளனர்.

தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு நீதிமன்ற தடையை மீறி, தீலிபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் கோண்டாவில் பகுதியில் அன்னங்கை ஒழுங்கையில் வைத்து கடந்த 2020 செப்டம்பர் 15ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும்  தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவுகூர்ந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட எம்.கே. சிவாஜிலிங்கத்தை மன்று எச்சரித்து, 2 இலட்ச ரூபா கொண்ட சரீரப் பிணையில் விடுவித்திருந்தது.

இது தொடர்பாக வல்வெட்டித்துறையில் இன்று சனிக்கிழமை (டிச. 31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  எம்.கே. சிவாஜிலிங்கம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தீலிபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்தமை தொடர்பாக கைதுசெய்து, 24 மணிநேரம் தடுத்துவைத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பயங்கரவாத தடைச்சட்டத்தை வழக்கில் புகுத்தக்கூடிய வகையிலே காவல்துறையினர் முயற்சிகள் எடுத்ததை நான் அறிந்தேன்.

பின்னர் சாதாரண சட்டத்தின் கீழ் நான் முன்னிலைப்படுத்தப்பட்டேன். எது எப்படி இருந்தாலும், கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையின்போது பயங்கரவாத சட்டத்தின் கீழ், நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்ய யோசித்துள்ளோம். சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இதன் கோவை அனுப்பப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த அடிப்படையில் நேற்றைய தினம் எனது வீட்டுக்கு வந்த காவல்துறையினர் எனக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிமன்ற கட்டளையை வழங்கிச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செயலுக்காக, யாழ்ப்பாணத்தில் உயர்நீதிமன்றம் இருக்கத்தக்கதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன?

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்தார்களா அல்லது பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒத்ததாக புலிகளின் மீளுருவாக்கம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கிறதா என்பது குற்றப்பத்திரிகை வழங்கிய பின்னரே தெரியும்.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என கூறப்படும்போது இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது-என்றார்.

Exit mobile version