திருமணமும் இராணுவ மயமாகிறதா? எதற்காக இந்த புதிய நடைமுறை? – அகிலன்

இராணுவ மயமாகிறதாNew திருமணமும் இராணுவ மயமாகிறதா? எதற்காக இந்த புதிய நடைமுறை? - அகிலன்

அகிலன்

திருமணமும் இராணுவ மயமாகிறதா?: வெளிநாட்டுப் பிரஜைகளைத் திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்கள், புதிய தடையைத் தாண்ட வேண்டியவர்களாக உள்ளார்கள். குறிப்பிட்ட வெளிநாட்டவர் குறித்த பாதுகாப்பு அமைச்சின் ‘கிளீயரன்ஸ் றிப்போர்ட்’ வரும் வரையில் அவர்கள் காத்திருக்க வேண்டும். ஆக, திருமணம் கூட இப்போது இராணுவ மயமாக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை பாதகமானதாக இருந்தால், அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்பதும் தெரியவில்லை.

மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் மேலதிக பதிவாளர்களுக்குப் பதிவாளர் நாயகத்தினால் கடந்த வாரம் அனுப்பப்பட்ட சுற்றுநிருபம் ஒன்றிலேயே, இந்த புதிய நிபந்தனைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ‘இலங்கைப் பிரஜைகள் யாராவது வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்வதற்கு விரும்பினால், அது குறித்து பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பாதுகாப்பு அறிக்கை ‘security clearance report’  ஒன்றை அதற்கு முன்னதாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையர் ஒருவரைத் திருமணம் செய்வதாயின், மூன்று ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் தற்போதுள்ள நடைமுறை. செல்லுபடியாகக் கூடிய கடவுச் சீட்டு, திருமணமாகவில்லை அல்லது விவாகரத்தானவர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் என்பனவே அவையாகும். இவை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக் கூடியவையாக இருந்துள்ளன.

புதுவருடத்தில் நடைமுறை

திருமணமும் இராணுவ மயமாகிறதாபுதுவருடத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விதிமுறைகளின்படி, இலங்கையரைத் திருமணம் செய்ய விருப்பவர் தான் வசிக்கும் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் கடிதத்தின் மூலப் பிரதியை இலங்கையிலுள்ள குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும். கடந்த ஆறு மாத காலத்தில் குறிப்பிட்ட நபர் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் சம்பந்தப்படவில்லை என்பது அதில் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

குடிவரவுத் திணைக்களத்தின் மூலமாகவே பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்படும். அதன் பின்னர் திருமணம் செய்வதற்கான அனுமதி மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் குறிப்பிட்ட நபர்களை அழைத்து, அவர் திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும்.

பாதுகாப்பு அமைச்சுக்கும், குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்றின் மூலமாகவே புதிய விதிமுறைகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. குடியவரவு – குடியகல்வுத் திணைக்கணளம் ஒரு சிவில் நிறுவனமாக – அதாவது பொது மக்களுடன் தொடர்புபட்டதாக இருந்தாலும் கூட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

தமிழருக்கே பாதிப்பு

திருமணச் சட்டத்தில் அதிரடியாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டமைக்கு, அரசாங்கம் என்னதான் காரணத்தைச் சொன்னாலும்கூட, இதனால் அதிகளவுக்குப் பாதிக்கப்படுபவர்களாக தமிழர்கள்தான் இருக்கப் போகின்றார்கள். பலமான புலம்பெயர் சமூகம் ஒன்றைக் கொண்டுள்ள இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமது திருமணத்துக்காக இலங்கைக்கு வருவதை வழமையாகக் கொண்டுள்ளார்கள்.

புதிய நடைமுறைகள் அவர்களை இலக்காகக் கொண்டதல்ல என அரசாங்கத் தரப்பில் சொல்லப்பட்டாலும், பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு என்ன வழியிருக்கப் போகின்றது என்பது தெரியவில்லை. தை பிறந்தால் வழி பிறக்கும் என பெரும்பாலான தமிழர்களின் திருமணங்கள் பொங்கலைத் தொடர்ந்து நடைபெறவிருந்தது. கொரோனாவால் தடைப்பட்டிருந்த ‘வெளிநாட்டு மாப்பிளைகள்’ பலருடைய திருமணங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அரசாங்கத்தின் இந்த அதிரடி அறிவிப்பு – பல குடும்பங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

திருமணமும் இராணுவ மயமாகிறதாபுதிய நடைமுறைக்கான காரணம் என்ன என்பதையிட்டுத் தகவல் வெளியிட்டுள்ள பதிவாளர் நாயகம் வீரசேகர, “வெளி நாட்டவர்கள் சிலர் போதைவஸ்து கடத்தலுக் காகவும், பணச் சலவைக்காகவும் – அதாவது தம்மிடமுள்ள கறுப்புப் பணத்தை மாற்றிக் கொள்வதற்காகவும் இலங்கையர்களைத் திருமணம் செய்வதை அவதானித்துள்ளோம். இலங்கையர்களைத் திருமணம் செய்பவர்கள் இவ்வாறான குற்றச்செயல்களில் சம்பந்தப்படாதிருப்பதை உறுதிப் படுத்துவதற்காகவே புதிய விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

தனிப்பட்ட சில பிரச்சினைகளை அரசாங்கம் தமிழர்கள் மீது அழுத்தங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளதா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகின்றது. இதனைவிட இதற்காக மற்றொரு காரணமும் சொல்லப்படுகின்றது.

திருமணமும் இராணுவ மயமாகிறதாஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போதும் வெளி நாட்டவர்களின் திருமணம் தொடர்பாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. ‘நடை முறையிலுள்ள திருமணப் பதிவு விதி முறைகளின் ஓட்டைகளை சிலர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்’ என இந்த ஆணைக்குழுவுக்குத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்தக் கருத்தை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, புதிய நடைமுறையை அதிரடியாக அமுலுக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

2019 ஏப்ரல் 21 இல் இடம்பெயற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், முஸ்லிம் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனைவிட, இது குறித்த விசாரணைகளின்போது, தாக்குதல்தாரிகள் அனைவரும் இலங்கையர்களே என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது, வெளி நாட்டவர்கள் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்தை மட்டும் கவனத்தில் எடுத்து, புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது என்பது நிச்சயமாக அரசியல் நோக்கத்துடனான ஒரு முடிவாகவே இருக்க முடியும்.

அடிப்படை உரிமை மீறல்

இந்தப் பின்னணியில்தான் இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல், ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் செயற்பாடு என விமர்சிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி ஒருவர் முறைப்பாடு செய்திருக்கின்றார்.

“எனது பிள்ளைகளும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள். ஒரு நாள் அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பும் போது அதற்கு பாதுகாப்பு செயலாளரிடம் அனுமதி கேட்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ள என் அனுமதி கூட தேவையில்லை. தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள அவர்கள் ஏன் வேறு சிலரிடம் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அனுமதி பெறவேண்டும்?”எனவும் சட்டத்தரணி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய முன்நிபந்தனைகள் சட்டவிரோதமானவை – சட்டத்திற்கு புறம்பானவை – பகுத்தறிவற்றவை – நியாயமற்றவை. அத்துடன், அரச மைப்பிற்கு முரணானது என்று குறிப்பிட்ட அவர், இந்த முறைப்பாட்டை முன்னுரிமையின் அடிப்படையில் விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவை கோரியுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் எந்தவிதமான கருத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால், சமூக ஆர்வலர்களும் அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

தலையிடும் அரசு

திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. தெரிவு. ஜனநாயக சமூகம் ஒன்றில், இதில் தலையிடுவதற்கான உரிமை அரசாங்கம் ஒன்றுக்கு இருக்க முடியாது. பிரஜைகளின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதற்கு அரசாங்கங்களுக்கு சில வரையறைகள் உள்ளன. திருமணத்தில் தலையிடுவதென்பது, அந்த வரையறையை மீறிச் செல்வதாகவே இருக்க முடியும். திருமணத்திற்குப் பாதுகாப்பு அமைச்சின் கிளியரன்ஸைப் பெற்றுக்கொள்வதென்பது நாடு இராணுவ மயமாக்கலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கு மற்றொரு ஆதாரமாக மட்டுமே இருக்க முடியும்!

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் நாடு இராணுவ மயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பது புதிய தகவலல்ல. ஏற்கனவே சிவில் நிறுவனங்கள் பலவற்றின் தலைமைப் பதவிகளுக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். கொரோனா தடுப்பு போன்றவற்றுக்கான செயலணிகளுக்கும் இராணுவ அதிகாரிகளே பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இப்போது திருமணத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவதென்பது நாகரீகத்தில் நாடு பல தசாப்த காலம் பின்னோக்கிச் செல்வதைத்தான் உணர்த்துகின்றது.

Tamil News