மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாயிகள் மற்றும் மடு தேவாலயத்திற்கு இடையில் காணப்பட்ட பிரச்சினை தொடர்பாக உண்மை செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளருக்கு மடு பகுதியில் கடமையாற்றும் லோரன்ஸ் என்ற கத்தோலிக்க மத குரு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மடு கோவில் மோட்டை காணி தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்ட சமயம் கோவில் மோட்டை விவசாயிகளுக்கும் லோரன்ஸ் மதகுரு குழுவினருக்கும் முரண்பாடு ஏற்பட்டது.
இந் நிலையில் குறித்த செய்தியை ஊடகவியலாளர் அறிக்கையிட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மடு தேவாலயத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு குறித்த மத குருவிடம் கோரியுள்ளார். ஆனாலும் குறித்த மத குரு விளக்கம் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து தன்னால் சேகரிக்கப்பட தகவலின் அடிப்படையில் குறித்த செய்தியை அறிக்கையிட்டுள்ளார்
இந்த செய்தி வெளியாகியதையடுத்து, குறித்த மத குரு தொலைபேசி ஊடாக குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் விதமாக பேசியதுடன் தான் யார் என்பதை காட்டுவேன் எனவும் தெரிவித்துள்ளார்
அத்தோடு நேற்று இரவு குறித்த ஊடகவியலாளர் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டை சில அடியாட்களுடன் சுற்றிவளைத்ததுடன் வீட்டின் மீது கற்களை வீசியுள்ளார். விடயம் அறிந்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில் அக்குழுவினர்அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில், தான் ஒரு மத குரு என்ற நிலையை மறந்து ஏழை விவசாயிகளின் காணிக்காக இவ்வாறு அச்சுறுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்ட மத குரு மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட ஊடகவியலாளரால் மடு காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.