மன்னாரில் வனவளம் மற்றும் பறவைகள் சரணாலய திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுபோகம் மற்றும் மேட்டு நில பயிர்களுக்கு வேலி அடைப்பதற்காக வெட்டப்படும் சிறு மரக்கிழைகளுக்காக ஏழை விவசாயிகள் மீது மன்னார் வனவள பிரிவினர் வழக்கு தாக்கல் செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி காரணமாக இன்று உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மட்டுப்படுத்தப்பட்ட சிறுபோக பயிர்ச்செய்கையுடன் பெருமளவான விவசாயிகள் தோட்ட பயிர்ச்செய்கையை மிகவும் எதிர்பார்ப்புடன் செய்து வருகின்றார்கள்.
கால்நடைகளிடம் இருந்து தோட்டப் பயிர்ச் செய்கையை வேலி அடைத்து பாதுகாப்பதற்காக சிறு மரக்கிழைகளை வெட்டினால் வனவள திணைக்களம் பறவைகள் சரணாலயம் போன்ற திணைக்களங்கள் எம்மீது வழக்கு தாக்கல் செய்கின்றது. ஏற்கனவே கடன்பட்டு தான் எமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
பெருங்காட்டு மரங்களை நாங்கள் வெட்டுவது இல்லை வேலிகள் அடிப்பதற்கு கிராமங்களில் காணப்படும் சிறு மரங்களில் உள்ள தடிகளையே நாங்கள் வெட்டுகிறோம். மன்னார் வனவளம் மற்றும் பறவைகள் சரணாலயம் போன்ற திணைக்களங்களின் அத்துமீறிய இந்த செயற்பாடு மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் பிரதேசங்களில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாக மாறும் என்று மன்னார் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.