மீண்டும் பிரதமராகுவதற்கு முயற்சிக்கும் மஹிந்த ராஜபக்ச

எதிர்வரும் 18ம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.  அதைத்தொடர்ந்து மேலும் போராட்டம் தீவிரமடைய ஜனாதிபதியாக இருந்த, கோட்டாபய ராஜபக்ஷவும் நடு இரவில் நாட்டைவிட்டு வெளியேறி, பிறகு பதவியில் இருந்தும் விலகினார்.

இந்த நிகழ்வுகளால் முதலில் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, பிறகு ஜனாதிபதியாகவும் தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. வெளிநாட்டில் இருந்து கோட்டாபய நாடு திரும்பினார்.

இந்நிலையில்,மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது அரசியல் நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பித்துள்ளது.

பொதுக்கூட்டங்களை நடத்துதல், முக்கிய பிரமுகர்களை சந்தித்தல், நிகழ்வுகளை நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில்  கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தவிர, மஹிந்த தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் ஆசனத்தில் அமர வைப்பதற்கான நடவடிக்கைகளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், மஹிந்த மீண்டும் பிரதமராவது சாத்தியமா? என்ற கேள்விக்கு சர்வதேச ஊடகமான பிபிசி தமிழுக்கு  கருத்து தெரிவித்துள்ள  மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சிவராஜா, “இப்போதைக்கு பிரதமராவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவர்கள் அதற்கு முயற்சி எடுக்கிறார்கள். ஆனாலும், அது சாத்தியம் இல்லை. பொதுஜன பெரமுன நடத்திய கூட்டங்களில் எல்லா இடங்களிலும் எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்றன. இப்படி எதிர்ப்புகள் வந்தால், இப்போது இருக்கின்ற நிலைமையும் குறைவடைந்து விடும் என ஜனாதிபதி தரப்பினர் பயப்படுகின்றார்கள். அதனால், உடனடியாக பிரதமர் பதவியில் மாற்றங்கள் செய்தவற்கு உடன்பாடு இல்லை.” என்று கூறியுள்ளார்.