சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடித மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமான்ய பீடங்களின் மகாநாயக்க தேரர்களே ஜனாதிபதிக்கு நேற்று அது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை மீண்டும் அழைத்து சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரியே மகாநாயக்க தேரர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் மகாநாயக்க தேரர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரதன்மையை நாட்டில் ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.