கோவிட்டினால் உயிர் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளது – உலக சுகாதார நிறுவனம்

புதிதாக பிறள்வடைந்த கொரோனோ வைரசினால் உலக மக்களுக்கு மீண்டும் மிகப்பெரும் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சீனா தனது எல்லைகளை திறந்துள்ள நிலையில் சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஒமிக்கிரோனின் புதிய எக்ஸ்.பி.பி-15 என்ற வகை தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட 25 நாடுகளில் பரவியுள்ளது. இது அதிகம் பரவும் தன்மை கொண்டபோதும் அதன் பாதிப்புக்கள் குறைவாகும். அமெரிக்காவில் 40 விகிதமான நோயாளிகளில் இந்த வகையே கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவில் பி.ஏ-52 மற்றும் பி.எப்-7 போன்ற வைரசுகளே அதிகம் பரவி வருகின்றன. இது தொடர்பான அவதானிப்புக்களை தாம் மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்றோஸ் அதனோம் கெபிரியஸ் தெரிவித்துள்ளார்.