மீளக்குடியேறியது முதல் ஓலைக் குடிசைகளிலே தொடரும் வாழ்க்கை
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டதும் திருகோணமலை தேர்தல் தொகுதிக்குட்பட்டதுமான ஒரு கிராமமே கும்புறுப்பிட்டி கிழக்கு நாவற்சோலை கிராமம். 1965 களில் இது ஒரு மாதிரிக் கிராமமாக இருந்தது. பின்னர் 1977களில் மக்கள் குடியேற்றம் இடம் பெற்றது.
1996 வரை மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் யுத்த வன்முறை காரணமாக குடியேற்றத்தை விட்டு வெளியேறினர். உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்களே 2006 ம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டு தற்போது இக் கிராமத்தில் வசிக்கிறார்கள்.
தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 569 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இதில் 20 குடும்பங்கள் 2006இல் இலங்கையில் இருந்து யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவுக்குச் சென்று மீண்டும் 2010இல் இந்த இடத்தில் மீண்டும் குடியேறினார்கள். அன்றாட கூலித் தொழில் மூலமாக தங்களது ஜீவனோபாயத்தைக் கொண்டு செல்லும் இம் மக்கள், ஓலைக் குடிசைகளிலும், தகரக் கொட்டில்களிலும் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். குறித்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளில் சிலர் கப்பல்துறை, கந்தளாய் ஆகிய இடங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகிறார்கள் .
அதிகமானவர்கள் ஆரம்பக் கல்வியுடன் பாடசாலைக் கற்றலைக் கைவிட்டவர்களாக உள்ளார்கள். இங்கு இரண்டு அரச உத்தியோகத்தர்கள் மட்டுமே காணப் படுகிறார்கள். அவர்களுள் ஒருவர் அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றொருவர் தபால் ஊழியர்.
74 குடும்பங்கள் தகரக் கொட்டில், ஓலை குடிசை என தற்காலிகமாக வாழ்ந்து வருவதுடன், 59 குடும்பங்கள் காணி, வீடு இன்றி உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஏனைய குடும்பங்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போதைய நிலையில் தற்காலிகமான வீடுகளில் வசிப்போர்கள் போதிய வருமானமின்மை காரணமாக நிரந்தர வீடுகளைச் சுயமாக கட்ட முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
இக்கிராம மக்களின் பெரும்பாலான பிரதான ஜீவனோபாய தொழில்களாக சிறு கடல் தொழில், கூலித் தொழில் என்பனவே உள்ளன. இக் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களில் 16 பேர் முன்னாள் போராளிகளாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்டவர்கள். நிரந்தர வீடுகள் 56 உள்ளன.
அரசாங்கம் மூலமாக பல அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் கூட பொதுவான அபிவிருத்திகளில் அதிக ஈடுபாடு காட்டப்படுகிறது. ஆனாலும் வீட்டுத்திட்ட அபிவிருத்தியில் இந்தப் பகுதியில் ஈடுபாடு காட்டுவது குறைவாக உள்ளது. நாட்டில் அமைதி ஏற்பட்ட பின்னர் முன்னாள் போராளிகளாக புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களும் அவர்களின் வாழ்வாதார நிலையும் இங்கு இதே கிராமத்தில் அடிப்படையாக உள்ளது.
இங்கு வசிக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட குடும்பத்தில் ஒரு குடும்பம் கடந்த ஒன்றரை வருட காலமாக தம்பதிகளாக தடுப்புக் காவலில் இருந்துள்ளார்கள்.
வெவ்வேறு இடங்களில் ஒரு குடும்பத்துக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன. ஆனால் இங்கு கணவன், மனைவி இருவரும் ஒரு குடும்பம் என்ற காரணத்தால் இருவருக்குமாக சேர்த்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் மூலமாக புனர்வாழ்வு பெற்று சமூகமயமாக்கப்பட்ட குடும்பங்களுக்காக புனர்வாழ்வு ஆணையகம் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கால்நடை வளர்ப்பு, (ஆடு,மாடு) சுயதொழில் உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் என ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டன.
ஆனாலும் வீட்டுத் திட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் முழுமையாக எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை
“ஒவ்வொரு வட்டாரத்துக்கும் மூன்று வீடுகள் வீதமே கிடைக்கப் பெறுகிறது சிலரிடம் காணிக்கான ஆவணங்கள் இன்மையும் காணப்படுகிறது. எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் வீட்டு திட்டம் வழங்கப்படும் ” என குச்சவெளி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.நாசிக் தெரிவித்தார்.
“பல்வேறு துன்பங்களுடன் 11 வருட காலமாக இந்த கறையான் கொட்டிலில் சிறு பிள்ளைகளுடன் வாழ்கிறோம். பலமுறை வீடு கேட்டு கோரிக்கை விடுத்த போதிலும், அந்த கதை அவ் விடத்திலேயே முடிந்து விடுகிறது. இந்தக் குடிசை வாழ்க்கையில் பிள்ளைகளை வெய்யிலில் வைத்து தினமும் வருத்தம் தான் வருகிறது. மழை வெயில் காலங்களில் நிம்மதியாக தூங்க முடியாது. பத்து வருட கால நிரந்தர வீட்டுக் கோரிக்கை நிறைவேறவில்லை. டிஎஸ் ஒபிஸ் ஊடாக வெறும் 20 ஆயிரம் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றது” என புனர்வாழ்வு பெற்ற இரு பிள்ளைகளின் தாயான செல்வராசா செல்வகுமாரி வயது (35) தெரிவித்தார்.
ஆனால் குறிப்பிட்ட இந்தக் குடும்பத்துக்கு அரசாங்கத்தினால் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப் பட்டதாக குச்சவெளி பிரதேச செயலக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியாக இருந்தாலும், மழை காலங்களிலும், வெயில் காலங்களிலும் நிம்மதியாகத் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். “ஓலைக் குடிசை, தகரக் கொட்டில்களை நம்பி ஏமாந்து ஏமாந்து நொந்து போயிட்டோம். கல் வீடுகளைத் தருவதாக ஏமாற்றியே வருகிறார்கள்” என யோகராஜா பால்ராஜ் வயது (34) தெரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கண்காணிப்பில் 90 வீடுகள் வழங்கப்பட்ட போதிலும், அதில் 40 வீடுகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. ஏனைய வீடுகள் முடிவுறுத்தப்படவும் இல்லை. மக்களை அங்கு குடியேற்றம் செய்யவுமில்லை. இதற்கு காரணம் ஆட்சி மாற்றமே. இவ் வீட்டுத் திட்டத்தினை அமுல்படுத்த கட்டம் கட்டமாகவே பணம் வழங்கப்பட்டது.
இது தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பிரதிநிதியான குச்சவெளிப் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாகேஸ்வரன் ஜெயகாந்தனிடம் வயது (43) வினவிய போது இவ்வாறு தெரிவித்தார்.
“மக்கள் வீடின்றிக் கொட்டில்களில் வாழ்ந்து வருகிறார்கள். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஐயாவிடமும் சொல்லியிருக்கிறோம். அரசிடம் கேட்டுச் சொல்வதாக சொன்னார். புதுசு புதுசாதான் திட்டங்களைச் செய்கிறார்கள். ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கம் செய்த வீட்டுத் திட்டத்தை கைவிட்டு விட்டார்கள்.
எந்த விதமான அபிவிருத்திகளோ, உட்கட்டமைப்பு வசதிகளோ இங்கு கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது. எல்லாவற்றிலும் ஏனைய பிரதேசங்களை விட இப் பிரதேச மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்” என்று கூறிய அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
“ இவ்வாறான குடிசை, தகரக் கொட்டில் வாழ்க்கையே தொடர்ந்தும் மக்கள் மத்தியில் நீடிக்கிறது. வீட்டுத் திட்டம் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற போது அவர்களின் பொருளாதார நிலை, ஏனைய அடிப்படை வசதிகளை வைத்தும் பிரதேச செயலகம் ஊடான புள்ளி விபரத் திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
கடந்த காலம் தொடக்கம் தற்போது வரையான அரசாங்கம் எங்களுக்கான வீட்டுத் திட்டங்களை அமைப்பதில் ஈடுபாடு காட்டவில்லை இது தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழு, மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் தெளிவுபடுத்திய போதும் இதற்கான தீர்வு கிட்டவில்லை” என மேலும் தெரிவித்தார்.
யுத்த சூழ்நிலை காரணமாக மீள் குடியேற்றப்பட்ட கிராமம் ஊடாக மக்களுடைய பல வருட கால எதிர்பார்ப்புக்கள் இங்கு நிறைவேறவில்லை. குச்சவெளிப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ்ச் சமூகத்தை அதிகம் கொண்ட பிரதேசம் என்றால் இந்த கிராமமே எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. அரச சார்பற்ற நிறுவனமான லீட்ஸ் எனும் நிறுவனம் மாத்திரமே அங்கு பணிபுரிகிறது. இவர்கள் கூட சிறுவர் உரிமைகள் தொடர்பான திட்டம் ஊடாக பணியாற்றி வருகிறார்கள். ஆனாலும் இங்கு வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான முன்னெடுப்புக்கள் எதுவும் இவ்வாறான அரச சார்பற்ற அமைப்புக்களாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவர்களிடம் அது பற்றி பேசிய போது நிதிப் பிரச்சினையை காரணமாக முன் வைத்தனர்.
தற்போதைய அரசாங்கம் ஊடாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் தலா 30 இலட்சம் ரூபா அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது. ஆனாலும் இதன் மூலம் வீடற்றவர்கள் எல்லோருக்கும் வீடுகளை வழங்குவது சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகிறது.
புதிதாக திருமண பந்தத்தில் இணைந்து குடும்ப வாழ்க்கையினை ஆரம்பிக்கும் போது, பலர் வீடு மற்றும் காணிகள் இல்லாமையால் சிக்கல் நிலை தோன்றுகின்றது. இதனால் இம் மக்களின் வீடில்லாப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினைப் பெற முடியாமல் உள்ளது.
மழை, வெயில் காலங்களில் இப் பகுதி மக்களுடைய வாழ்க்கையை ஒரு கணம் சிந்தித்துப்பார்க்க வேண்டியுள்ளது. “கல்யாணங் கட்டி ஒன்பது வருடங்களாகின்றன. கடன் பெற்றே இந்தத் தகரக் கூடாரத்தில் வாழ்ந்து வருகிறேன். உள்ளுக்குள் கறையான் அரித்துள்ளது. மாரி மழைக்கு இந்த கொட்டிலும் விழுந்துவிடும் .இரு பிள்ளைகளை வைத்து கொண்டு இதற்குள் நிம்மதியாகத் தூங்க முடியாது. இப்போதைக்கு இந்த முற்றத்திலேயே தூங்க வேண்டியுள்ளது. கடும் வெட்கையாக உள்ளது” என இரு பிள்ளைகளின் தாயான டிலக்சனா வயது (27) தெரிவித்தார்.
அது போன்றே மூன்று வீடுகள் என்றவாறு வருட ஒதுக்கீடு கூட இங்கு சரியாக அமுல்படுத்தப்படவில்லை என்கின்ற நிலை உள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் ‘கிராமத்துடனான கலந்துரையாடல்’ எனும் தேசிய வேலைத் திட்டத்துக்கு அமைவாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் தலா 3 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளிப் பிரதேச செயலகர் பிரிவிலும் குறித்த கலந்துரையாடல் 08.10.2021 அன்று இடம் பெற்றது. இந்த திட்டம் ஊடான முன்மொழிவினூடாக கிராம அபிவிருத்தி இடம் பெறவுள்ளது. மொத்தமாக திருமலை மாவட்டத்துக்கு 1574 மில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள மேற்படி கலந்துரையாடலின் போது தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 230 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இந்த நிதி உதவி பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. ஆட்சிக்கு மாறி மாறி வரும் அரசுகள் பொதுவான அபிவிருத்திகளில் கவனம் செலுத்துவதுண்டு. இதனால் மீள் குடியேற்ற கிராமத்தில் வாழும் மக்களின் நிரந்தர வீட்டுக்கான கனவு நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது.
” 2006 ல் இந்தியாவுக்கு அகதிகளாக சென்று மீண்டும் இலங்கைக்கு 2009 ல் திரும்பி வந்து இந்த தகரக் கொட்டிலில் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறோம். இந்த மாரிக்கு இந்த கொட்டில் விழுந்திடும் உள்ளுக்குள் கறையான் அரித்துள்ளது. வீட்டுத் திட்டம் வரும் என்கிறார்கள். வந்தால்தான் தருவோம் என்கின்றனர். எதுவும் இல்லை. 25 வருட காலமாக இதே நிலையில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு மழை வெயிலில் வாழ்கிறோம். இதில் இருக்க முடியாது. மழை காலங்களில் நீர் ஒழுக்கு ஏற்படுகிறது. பொருத்து வீட்டு திட்டம் என்ற பெயரில் அத்திவாரம் மட்டுமே இங்கு போடப்பட்டு தந்தது. அது கூட முடிவுறவில்லை இதே நிலைதான் தொடர்கிறது ” என வீ.சஜீத் குமார் வயது (28) தெரிவித்தார்.
மக்களுடைய உரிமைகளைப் பெற அவர்களுக்கு உரித்துடையவர்களாகவும், அவற்றை வெளியிடுவதற்கு ஊடகங்களுக்கு உரிமை உள்ள போதிலும், அவ் இரண்டும் இங்கு மறுக்கப்படுகிறன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் குச்சவெளிப் பிரதேச செயலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டதுடன், குறித்த பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு வினவினோம். உரிய கிராமசேவகர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு சொல்வதாக கூறப்பட்டது.
மக்களின் பிரச்சினைகளை நிரந்தரமாகவும், வெளிப்படையாகத் தீர்க்கவும் மக்களுக்காகவே அரசாங்கம் என்ற நிலை காணப்பட வேண்டும். வறுமை நிலை காரணமாக நாட்டை விட்டு வேலை வாய்ப்புக்காக பணிப் பெண்களாக செல்லத்தான் செய்கிறார்கள். தங்களுக்கான குறைந்தபட்சம் ஒரு சிறிய வீட்டையாவது கட்ட வேண்டும் என்ற கனவோடுதான் வெளிநாட்டுக்கு செல்கின்றார்கள். இருந்தும் அதுவும் நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது.
“23 வருடங்களாக இந்த தற்காலிகத் தகரக் கொட்டில் வாழ்க்கை தான் மழை காலத்தில் கூட இங்கே தான். எனது மனைவி சவூதிக்கு சென்று ஒரு வருடமாகிறது. நிரந்தரமான வீடொன்றை கட்ட வேண்டும் என்பதற்காகவே வெளிநாடு சென்றார் என மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.குணராசா வயது (44) தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தற்போது பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதாக இருந்தால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடான சுற்றறிக்கையின் பிரகாரம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருப்பின் வெளிநாடு செல்ல முடியாது என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி சிலர் பிள்ளைகளை விட்டு விட்டு எப்படியோ வெளிநாட்டுக்கு செல்கின்றனர். இது ஒரு பெரும் சமூகப் பிரச்சினையாகவும் தோற்றம் பெற்றுள்ளது.
இதே கிராம மக்கள் வீடில்லா பிரச்சினை மட்டுமல்லாது, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததன் காரணமாக சீரான பாதையின்மை, குடிநீர் இன்மை காரணமாகவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கான்றனர். சுத்தமான குடிநீரினைக் கூட பணம் கொடுத்துப் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
சொந்தமான வீடுகளை சுயமாக உழைத்துக் கட்ட வேண்டும் என்ற நிலை அவர்களின் மனதுக்குள் குடி கொண்டிருந்தாலும், அது அநேகமானவர்களுக்குச் சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது.
நாளாந்தம் செய்யும் கூலித் தொழில் அன்றாடம் உண்பதற்கே போதுமானதாக உள்ள நிலையில், நிரந்தர கல் வீட்டினை அமைக்க இயலாமையை எடுத்துக் காட்டுகிறது.
குறித்த கிராமம் அபிவிருத்தியடைய வேண்டும் என்ற நிலை இருந்தாலும் கூட, சமூகப் பொருளாதார அபிவிருத்தியை விடவும் இம் மக்களின் ஒரே ஒரு எதிர்பார்ப்பாக நிரந்தர கல் வீட்டினை நினைத்துக்கூட பார்க்க முடியாமல் உள்ளது.
மக்களின் இவ்வாறான நிலைமைகளை அரசியல் உயர்மட்டத்தில் உள்ளவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் நன்கு உணர்ந்துள்ளனர். இருந்தாலும் இது தொடர்பில் முழுமையான கரிசனை காட்ட அவர்களால் முடியவில்லை. காலம் காலமாக தேர்தல் காலங்களில் மாத்திரம் அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளே எஞ்சுகின்றன. இம் மக்களின் தொடரான இவ்வாறான வாழ்க்கைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது யார்?
பொதுவான அபிவிருத்திகளை விடவும் தங்களது கனவு இல்லத்துக்காக காத்திருக்கும் இந்த மக்களின் ஏக்கம் எப்போது தீரும் என இக் கிராமவாசிகள் அங்கலாய்க் கின்றனர்.