மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைக்க எனத் தெரிவித்து பெருமளவான தென் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு படையெடுத்துவருவதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசகாணிகளை முதலீட்டு நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு தினமும் கோரிக்கைகள் தென் பகுதியை சேர்ந்தவர்களினால் சமர்ப்பிக்கப்படுவதாகவும் இவற்றில் பல தெளிவான முதலீட்டு திட்டங்கள் இன்றி காணப்படுவதாகவும் அவை காணிகளை அபகரிக்கும் நோக்கிலேயே சமர்ப்பிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.
தென் பகுதியில் உள்ள செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளின் ஆதரவுடன் குறித்த கடிதங்கள் வழங்கப்படுவதாகவும் இதன்காரணமாக அதிகாரிகள் மட்டத்தில் கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவை தொடர்பில் மாவட்டத்தில் உள்ள அரசாங்க சார்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் போது, முதலீடுகளும் வேலைவாய்ப்பும் கிடைக்கும் காணிகளை வழங்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.