யாழ்ப்பாணம், தென்மராட்சி – கொடிகாமம் மத்தியில் தனியாருக்கு சொந்தமான துயிலுமில்ல காணி இராணுவ முகாமுக்கு அளவிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் எதிர்ப்பையடுத்து காணி அளவீடு கைவிடப்பட்டது. கொடிகாமம் துயிலுமில்லம் அமைந்திருந்த இடத்தில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தின் 15து கஜபாகு படைப் பிரிவிற்க்கே காணி அளவீடுசெய்யப்பட்டுள்ளது.
தனியாருக்குச் சொந்தமான 10.5 பரப்பு அளவுடைய துயிலுமில்ல காணியே இவ்வாறு இன்று அளவிடப்பட்டுள்ளது. தகவலறிந்த பொதுமக்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். அளவீட்டு பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் வருகை தந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து அளவீடு செய்யும் பணியை கைவிட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர். வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள இடங்களை சத்தமில்லாமல் இராணுவத்தினருக்காக அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கத்து.