கிண்ணியாவில் கழிவுகள் அகற்றும் பணிகள் சீரின்மையால் குப்பை கூழங்கள் எல்லாம் வீதியில் சிதறிக் கிடப்பதாகவும் மக்கள் மிகவும் அவதியுறுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
வழமையாக திங்கட் கிழமைகளில் அகற்றப்படும் கழிவுகள் இதுவரை எடுக்கப் படாமல் நாய்கள், காகம், மாடுகள் போன்றவற்றால் சிதறடிக்கப்பட்டு வீதிகளில் கிடப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
மேலும் குட்டி கராச்சி, புகாரியடி, T சந்தி போன்ற சுற்று வட்டங்களில் நடப்பட்ட புற்களும், தாவரங்களும் இறந்தும் காணப்படுகின்றன. இதற்கு பொறுப்பானவர் களிடம் வினவுகின்ற போது கிண்ணியா நகர சபையில் பாரிய நிதித் தட்டுப்பாடு நிகழ்வதாகக் கூறுகின்றனர்.
தற்காலிக ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப் படாமையால் பணிக்கு சமுகம் தருவதில்லை. எரிபொருள் கொடுப்பனவை வழங்காமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் எரிபொருளை வழங்க மறுக்கின்றனர். வாகனங்கள் பழுதடைந்தால் திருத்துவதற்கு முடியாதுள்ளமை போன்ற காரணங்களால் உரிய வேளைக்கு பணிகளை முடிக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனவே நகரசபை நிர்வாகம் சீரான முகாமைத்துவத்தை செய்து மக்களுடைய தேவைகளை உரிய நேரத்திற்கு நிறைவேற்றி கொடுப்பதோடு நகரத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.