Tamil News
Home செய்திகள் தமிழர்களின் அடையாளத்தை அழிக்க உதவியமைக்காக கருணாவுக்கு வழங்கப்பட்ட  பரிசுப் பொதியே பிரதி அமைச்சு

தமிழர்களின் அடையாளத்தை அழிக்க உதவியமைக்காக கருணாவுக்கு வழங்கப்பட்ட  பரிசுப் பொதியே பிரதி அமைச்சு

தமிழர்களின் அடையாளத்தை அழிக்க உதவியமைக்காக கருணா அம்மானுக்கு அரசினால் வழங்கப்பட்ட  பரிசுப்பொதியே நியமன எம்பியும் பிரதி அமைச்சும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான  கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று(24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்…  இந்த நாட்டிலே தமிழ் மக்களை கொலை செய்து படுகுழியிலே தள்ளுவதற்கு உறுதுணையாக இருந்தவர் கருணா. அதற்காக அப்போதைய அரசினால் வழங்கப்பட்ட சன்மானம் பிரதி அமைச்சு. அவரது அடுத்தகட்ட இலக்கு அம்பாரை மாவட்ட தமிழர்களின் இருப்பை இல்லாதொழிப்பது. அதற்காகவே இங்கு களம் இறக்கப்பட்டுள்ளார். இதனை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

கருணா அம்மான் பிறந்த மண்ணில் வாழுகின்ற மக்களில் அதிகமானவர்கள் மிகவும் வறுமையான கஸ்டப்படுகின்ற அன்றாட தொழிலாளர்கள். அவரது கிராமத்தில் உள்ள அதிகமான வீதிகள் செப்பனிடப்படாத இருள் சூழ்ந்த மணல் வீதிகள். வறுமை நிலையில் உள்ள முன்னிலை மாவட்டம் மட்டக்களப்பு. இவ்வாறு அவரது சொந்தக்கிராமம் சொந்த மாவட்டம் இருக்க இன்று அம்பாரை மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய போவதாக கூறுகின்றார்.

இவர்களை போன்ற பலர் இங்கு பேரினவாதா கட்சிகளினால் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களது நோக்கம்; அம்பாரை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதல்ல. இங்கிருக்கும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதியை இல்லாமல் செய்து அதன் மூலம் அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் இருப்பை இல்லாமல் ஆக்குவதுமே என்றார்.

அமைச்சர் ஒருவரினால் செய்ய முடியாத பலகோடி ரூபா செலவிலான அபிவிருத்தியினை அம்பாரை மாவட்டத்தில் செய்திருக்கின்றேன். அதேநேரம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சதித்திட்டங்களையும் முறியடித்ததுடன் உரிமை சார்ந்த விடயங்களுக்காகவும் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் குரல் கொடுத்துள்ளேன். இனியும் குரல் கொடுப்பேன்.

தேர்தலின் பின்னரும் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும்  உங்களில் ஒருவனாக உங்கள் மத்தியில் எப்பொழுதும் இருப்பேன் என்றார்.

இதேநேரம் அபிவிருத்தியாக இருந்தாலும், நிலம் தொடர்பான பிரச்சினையாக இருந்தாலும் உரிமை சார்ந்த விடயமாக இருந்தாலும் அம்பாரை மாவட்டத்திற்கு தனித்தவமான ஒரு தமிழ் பிரதிநிதி தேவை. அதனை உறுதி செய்ய வேண்டியது இங்கு வாழும் ஒவ்வொரு தமிழனின் கடமை எனவும் குறிப்பிட்டார்

 

Exit mobile version