கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது இலங்கை மீனவர்கள் அதிருப்தி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இன்று இலங்கை மக்கள் மத்தியில் பாரிய மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தற்போது இலங்கை மீனவ சமூகத்திற்கு மத்தியில் பாரிய மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நிவாரண உதவிகளை செய்வதை போல காண்பித்து, தமது உரிமையை பறித்தெடுக்க தமிழக முதல்வர் முயற்சிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை – இந்திய மக்களின் தொப்புள் கொடி உறவை அறுக்கும் செயற்பாடாகவே தாம் இதனை பார்ப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா  தெரிவித்துள்ளார்.

நன்றி- பிபிசி Tamil News