Tamil News
Home செய்திகள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கோலாகல ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கோலாகல ஆரம்பம்

கச்சதீவு திருவிழா நேற்று ஆரம்பமான நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி இடம்பெற்று மாலை தேர் பவனியுடன் நிறைவு பெறவுள்ளது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கச்சதீவு திருவிழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட இரு நாட்டு மறைமாவட்ட பாதிரியார்கள் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றன. கச்சதீவு திருவிழாவில் தமிழகத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்து 408 பேர் செல்ல பதிவு செய்திருந்தனர்.

நேற்று(3) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ராமேசுவரத்தில் இருந்து பக்தர்கள் நேற்று காலை 7 மணி முதல் புறப்பட்டுச் சென்றனர். ராமேசுவரம் துறைமுகத்தில் இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன. 60 விசைப்படகுகள், 12 நாட்டு படகுகள் என மொத்தம் 72 படகுகளில் 2408 பேர் நேற்று காலை முதல் கச்சத்தீவுக்குச் சென்றனர். இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பக்தர்களின் கச்சதீவு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கச்சதீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், பொலிசார் சரிபார்த்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.
மதுப் போத்தல்கள், பொலித்தீன் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அளவு இந்தியப் பணம் மற்றும் திண்பண்டங்கள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. அந்தோணியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குத்தந்தை எமலி போல் ஏற்றி வைத்தார். தொடர்ந்து சிலுவைப் பாதை திருப்பலி நடைபெற்றது. 2ஆம் நாளான இன்று (சனிக்கிழமை) யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் சிறப்பு திருப்பலியோடு விழா நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறும். விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள்.

கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு இராமேஸ்வரம் கடல் பகுதியில் நாளை 5 ஆம் திகதி வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version