மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும்- விடுதலை இயக்கம்

DSC01366 மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும்- விடுதலை இயக்கம்

அனைத்து வடிவங்களிலும் சிறுவர்கள் மீது இடம் பெறும் பாலியல் சுரண்டல் களுக்கும் எதிராக ஒரு வலுவான நிலைப் பாட்டை எடுக்க  வேண்டும் என விடுதலை இயக்கம்  வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) வீட்டில் வேலை செய்து வந்த 16 வயது ஹிசாலினி எனும் மலையகத்தை சேர்ந்த சிறுமி அண்மையில்  தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மரணம் அடைந்திருந்தார்.

அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அதே வேளை இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் செல்வதாக  குற்றம் சுற்றம் சாட்டும் பொது மக்கள் மற்றும் அமைப்புக்கள், இந்த மரணத்திற்கான நீதியை பெற்றுக் கொடுக்க வலியுறுத்தி பல்வேறு கண்டனப் போராட்டங்களை பல மாவட்டங்களில் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த சிறுமியின் மரணம் குறித்து விடுதலை இயக்கம்  கருத்து தெரிவிக்கையில்,

“சிறுவர்களை வேலைக்கு அமர்த்தலுக்கும் அனைத்து வடிவங்களிலும் சிறுவர்கள் மீது இடம்பெறும் பாலியல் சுரண்டல்களுக்கும் எதிராக ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்க அனைவரையும் கோருகிறோம். சிறுவர்களுக்கு எதிரான இந்தக் குற்றங்கள் குறித்து விரைவான மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க சிறுவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகளை நாங்கள் கோருகிறோம்.
சிறுவர் பாதுகாப்புக்கு பொறுப்பான நிறுவனங்களுடனான எங்கள் தொடர்புகள் நடைமுறையில் உள்ள முறைமை மீதான அரசின் நிதி ஒதுக்கீடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை உணர்த்தியிருக்கிறது. அங்குள்ள அதிகாரிகளுக்கு சிறுவர் தொழிலாளர்களின் நிலைமை பாலியல் சுரண்டல் பற்றிய புரிதல் இல்லை என்பதுடன் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் நீதியை வழங்கும் நிலைக்கு கொண்டு வரப்படுவதில்லை. அதன் விளைவாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கொடுமை, வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு ஆளாவதுடன் அது அவர்களின் நல்வாழ்வு, கல்வி மற்றும் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்துகிறது.
மலையக தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஹிஷாலினி போன்ற சிறுவர்களின் சம்பவங்களில் இது குறிப்பாக உண்மையாகிறது. அங்கு அவர்களுக்கு தரமான, தடையற்ற கல்வி கிடைப்பதில்லை. பலர் தங்கள் குடும்பங்களை தாங்கிப் பிடிப்பதற்காக தங்கள் வீடுகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள பெருநகரங்களில் குறைந்த ஊதியத்திற்கு, துஷ்பிரயோகம் அதிகம் உள்ள வீட்டு பராமரிப்பு வேலைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.
சிறுவர் தொழிலாளர்களை வீட்டு வேலைக்கு அமர்த்தும் வரலாறும் நடைமுறையும் மலையகத் தமிழ்ச் சமூகத்தின் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறது. வீட்டு வேலைக்கு தள்ளப்படும் சிறுவர்கள் பெரும்பாலும் ஒரு குடும்பத்தோடு பிணைக்கப்பட்ட உழைப்பிலேயே வாழ்நாள் முழுவதும் இருப்பார்கள். வீட்டு வேலைக்கோ அல்லது வேறு வகையான தொழில்களுக்கோ பெருந்தோட்ட அதிகாரி ஒருவர் பிள்ளை ஒன்றை கேட்கும் போது பெருந் தோட்டங்களில் மலையக தமிழ் சமூகம் முன்னெடுக்கும் அடிபணிந்த வாழ்வு மறுப்புத் தெரிவிப்பதற்கு சிறிதளவேனும் இடமளிப்பதில்லை.
எனவே, சிறுவர் தொழிலாளர் என்ற பாரிய பிரச்சினைக்குள் இந்த குறிப்பிட்ட சிறுவர் தொழில், பாலியல் துஷ்பிரயோக பிரச்சினையை குறிப்பாக மலையக தமிழ் சமூகத்தினரின் பிள்ளைகளுக்கு இடையிலேயே நாம் காண்கின்றோம்.
ஹிஷாலினிக்கான நீதி என்பது சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு சமூக நலப் பிரச்சினைக்கு அப்பாற் பட்டதாகவும், மலையக சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும், அனைத்து மக்களுக்கும் நீதி மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார அக்கறையாகவும் கருதப்பட வேண்டும். மலையக சமூகத்திற்குமான மேம்பட்ட கல்வி வசதிகள், சுகாதார சேவைகள் அவர்களது குழந்தைகளுக்கு வாழ்க்கையில் சமமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்த மிக முக்கியமானவையாகும்” என்றுள்ளது.
இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021