கோட்டாபயவுக்காக சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து  சவூதி ஏர்லைன்ஸ் விமானம் SV 788 மூலம்  சிங்கப்பூர் புறப்பட்டதாக  தகவல் வெளியாதைத் தொடர்ந்து சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் ஊடகவியலாளர்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்சே மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று இரவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலேயில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தனர்.

எனினும் பாதுகாப்பு காரணங்களால் பயணிகள் விமானத்தில் திட்டமிட்டபடி சிங்கப்பூர் பயணம் பிற்போட்டப்பட்டது. மாலைதீவில் இருந்து புறப்படுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ ஒரு தனியார் ஜெட் விமானத்தை கோரியிருந்தார் என்றும் இது தொடர்பில் மாலைதீவு அதிகாரிகள் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இன்று முற்பகல் மாலைதீவின் வெலனா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதி எயார்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி பயணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் ஜனாதிபதி இன்று சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மாலைத்தீவுக்கு சென்றுள்ள, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து இன்று சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூருக்கு செல்வுள்ளதாகவும் பின்னர் அங்கிருந்து சவூதி அரேபியாவிற்கு செல்லவுள்ளதாகவும் மாலைதீவு அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.