இலங்கையின் கடன் பிரச்சினையை தீர்க்க ஜப்பான் உதவும்,அதே போல் சீனாவும் இந்தியாவும் உதவ வேண்டும்-ஜப்பான்

இலங்கையின் கடன் பிரச்சினையில் ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளதாகவும் அதேபோன்று, சீனா மற்றும் இந்தியா போன்ற ஏனைய கடன் வழங்குநர்களும் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே ஜப்பானின் நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி (Shunichi Suzuki) இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

சீனா, இந்தியா மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கு தனது சொந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இலங்கையை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தகைய முன்நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ஜப்பான் தனது பங்கைச் செய்யும் என்று ஜப்பான் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய சுசுகி அனைத்து கடன் வழங்குநர்களும் ஒருங்கிணைந்த முறையில் இலங்கைக்கு ஆதரவை வழங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் கடனாளி நாடுகள், கடனை பெற்றுக்கொள்வதற்கான சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.