நீதி அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு – யாழ். செயலகத்துக்குள் நுழைந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே தற்போது மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது.

இதன்போது நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்து கொண்ட நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓஎம்பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாஸ ராஜபக்ஷ வெளியேறு என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் குறித்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.