விகாரையை அகற்றக் கோரிய போராட்டத்தில் யாழ். தையிட்டியில் கைதான 9 பேரும் பிணையில் விடுதலை

தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 9 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று  போராட்டத்தில் ஈடுபட்ட போது, போராட்டம் நடத்த நீதிமன்றம் தடைவிதித்ததாக தெரிவித்து,  காவல்துறையினர், போராட்டக்காரர்களை கைது செய்ததோடு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை பலவந்தமாக தூக்கிச் சென்றனர். கைதானவர்கள் சார்பில் 15 சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இந்நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட 9 பேரையும் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது கைதானவர்களை விளக்கமறியலில் வைக்க காவல்துறையினர் கோரிய போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் அதை எதிர்த்தனர்.

இன்று 2.30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, கைதானவர்களை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஜனநாயகரீதியிலான போராட்டங்களை தடுக்க முடியாதென்றும் உத்தரவிட்டது.