சம்பூர் சூரிய மின் சக்தி திட்டம் ஊடாக தமிழ் மக்களது காணிகள் பறிபோவதை ஏற்க முடியாது

காணிகள் பறிபோவதை ஏற்க முடியாது

தமிழ் மக்களது காணிகள் பறிபோவதை ஏற்க முடியாது

இலங்கை- சம்பூர் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சூரிய மின் சக்தி திட்டம் ஊடாக தமிழ் மக்களின் காணிகள் பறிபோகுமா என பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த ரின்கோ சேவ் அமைப்பின் தலைவர் எஸ் எச்.கிரிசாந்த குமார், இதனை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஊடக இல்லத்தில் நேற்று (15) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“திருகோணமலை துறை முகத்தை அண்டிய பகுதியில் சம்பூர் கிராமம் உள்ளது. இந்தியாவின் அரசியல் உள் நோக்கம் தான் என்ன? சிறுபான்மை மக்களுடைய காணி அபகரிப்பு இதில் ஒரு போதும் இத் திட்டத்துக்காக இடம் பெறக்கூடாது. 2015 ல் கூட அனல் மின் நிலையம் இதே பகுதியில் அமைக்க எடுத்த முயற்சி மக்கள் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது.

மீண்டும் இவ்வாறு தமிழ் மக்களுடைய காணிகளை அபகரிப்பதை நிறுத்த வேண்டும். அன்றாடம் தொழில் செய்து விவசாயத்தில் ஈடுபடும் மற்றும் 200 வருடங்களுக்கும் மேலாக பழங்குடி மக்கள் என பல சமூகத்தவர்கள் வாழ்ந்து வரும் கிராமமே இந்த சம்பூர் பகுதியாகும். எனவே தமிழ் மக்களுடைய காணி இத் திட்டம் ஊடாக அபகரிக்காமல் செயற்பட வேண்டும் இதனை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

Tamil News