தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை எழுச்சியாக முன்னெடுக்க தீர்மானம்-வேலன் சுவாமிகள்

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக நல்லை ஆதீனத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இந்த நினைவேந்தலை மக்கள் எழுச்சியாக புரட்சியாக முன்னெடுக்கும் விதமாக நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில தியாக தீபம் நினைவேந்தலினை ஒழுங்கு செய்ய 15 பேர்கொண்ட பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நினைவேந்தலை முன்னெடுக்கின்ற போது எந்தவித முரண்பாடும் இன்றி யாரும் எந்தவித சுய இலாபத்திற்கும் இதனை பயன்படுத்தாத விதத்திலே ஒட்டுமொத்த தமிழினமாக விடுதலைக்கான பயணமாக முன்னெடுப்பதற்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் இதய சுத்தியோடும் இலட்சியப்பற்றோடும் முன்னெடுக்க இருக்கின்றோம்.

நினைவேந்தல் கட்டமைப்பிலே மதத் தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய பிரதிநிதிகள், மாவீரர்களினுடைய பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகளினுடைய பிரதிநிதிகள், சிவில்சமூகப் பிரதிநிதிகள் போன்ற பலர் பொதுகட்டமைப்பிலே உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.

அந்த வகையிலே காலத்தின் தேவை கருதி விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கட்டமைப்பு தேர்வில் நிறைவடைந்து இருக்கின்றது.

இப்போதிருந்து இந்த கட்டமைப்பானது தன்னுடைய ஒருங்கிணைப்பு பணிகளை முன்னெடுக்க இருக்கின்றது.

அந்த விதத்தில் கட்சித் தலைவர்களை சந்தித்து மக்கள் ஆதரவை பெற்று எவ்வாறு இந்த நிகழ்வினை முன்னெடுக்கலாம் என்பது பற்றி நாங்கள் தொடர்ச்சியாக செயல்பட இருக்கின்றோம்
நினைவேந்தல் இம்முறை மிகவும் சிறப்பாக இடம் பெற வேண்டும். எங்களுடைய உறவுகள் அனைவரும் இதற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும்.

மக்கள் அனைவரும் இம்முறை எழுச்சியினை காட்ட வேண்டும். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற கோட்பாட்டுக்கு அமைய மக்களுடைய எழுச்சி எப்பொழுது ஏற்படுகின்றதோ அப்போதே இனத்தினுடைய விடுதலை அனைத்துமே சாத்தியமாகும் என்பது நிதர்சனமான உண்மை.

அந்த அடிப்படையிலே இந்த பொதுக் கட்டமைப்பு செயல்பட்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மிக சிறப்பாக நினைவு கூறும் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்- என்றார்.