“பதவியில் அமர்த்தியோரே வீதியில் இறங்கி துரத்தும் கேவலம்” – பாராளுமன்றில் ரிஷாட் எம்.பி  

வீதியில் இறங்கி போராடும் நிலை

பதவியில் அமர்த்தியோரே வீதியில் இறங்கி போராடும் நிலை

இலங்கையின்  ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு கோரி, பாமரர்களும், படித்தவர்களும் சிறுவர்களும் பெரியோரும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளமை, இந்த நாட்டின் துரதிஷ்டமாகும் என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (07) உரையாற்றிய அவர்,

“இன்று இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வீதிகளில்  சிறுவர்கள் முதல் பெரியோர் வரை, படித்தவர் முதல் படிக்காதவர் வரை எல்லோருமே “கோட்டா கோ ஹோம்” என்ற கோஷங்களுடன் திரிகின்ற மிகவும் இழிவான நிலை இந்த நாட்டுக்கு வந்துள்ளது. ஜனாதிபதிக்கு  பைத்தியம் என்றும் கூறுகின்றனர். இவ்வாறான நிலை ஏற்பட்ட பிறகும், இந்த சபையிலே ஒருசில அமைச்சர்கள் “நாங்கள் ஒருபோதும் விலகப் போவதில்லை, ஜனாதிபதியையும் விலக அனுமதிக்கமாட்டோம், அவர் விலகவும் மாட்டார், எதற்கும் முகங்கொடுக்க தயாராக உள்ளோம்” என பேசுகின்றனர்.

அவர் நாட்டின் தலைமைக்கு தகுதி இல்லாதவர் என தேர்தலுக்கு முன்னரேயே நாங்கள் உணர்ந்துகொண்டவர்கள். அதனாலேயே நாம் அவருக்கு எதிராக பிரசாரம் செய்தோம். எனினும், அவருக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. பாராளுமன்றத் தேர்தலிலும் அவரது கட்சி வெற்றியீட்டியது. இவ்வாறு வாக்களித்தவர்கள்தான், இன்று நடு வீதிகளிலும் சந்திகளிலும் அவருக்கும், அவரது அரசுக்கும் எதிராக கோஷமிடுகின்றனர். போராடுகின்றனர்” என்றார்.